காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய மனிதாபிமானப் பிரச்சினையாகவுள்ளது. எனினும் இப்பிரச்சினை இது பலருக்கு பலவிதமான வடிவங்களில் தென்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் அவர்களது உறவுகள் மீளவேண்டும், காணாமல் செய்யப்பட்டோரின் நிலை என்ன என்ற கேள்விகள் கொண்டதாக உள்ளன. இதனை அண்மையில் வெளியாகிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை கூட மீளவும் நினைவுறுத்தியிருந்தது. இதேவேளை மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினரைப் பொறுத்தளவில் படையினரைக் காட்டிக்கொடுக்கும் முயற்சியினை அரசாங்கம் செய்கின்றது என்ற விசமப்பிரசாரத்திற்குரி ய ஒன்றாகவுள்ளது.
மஹிந்த ஆதரவுச் சக்திகள் காணாமல் போனோர் விடயத்தினை தமிழர் சார்ந்த பிரச்சினை மட்டுமே என அடையாளப்படுத்தி அதன் ஊடாக எதாவது ஓர் வகையில் சிங்கள மக்களை குழப்பி அரசியல் லாபம் தேட எத்தனிக்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளன.
நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினைப் பொறுத்தளவில் இப்பிரச்சினை சர்வதேச அழுத்தங்களுக்கு உரிய பிரச்சினையாகவுள்ளது. காணாமல் போனோர் பிரச்சினையில் நடவடிக்கைகளை மேற்கொள்வது விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான உத்தியாவும் உள்ளது.
இவ்வாறான பல்வேறுபட்ட நிலைமைகளுக்குள்ளேயே காணாமல் போனோரைத் தேடியறியும் அலுவலகத்தினை அமைப்பதற்கான சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேறியுள்ளது.
இச் சட்டமூலம் மஹிந்த சார்பு தரப்புக்களினால் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் மேற்கொள்ளப்பட்ட பாரிய எதிர்ப்புக்களையும் தாண்டி நிறைவேற்றப்பட்டுள்ளது. மஹிந்த தரப்பு அணியினர் இவ் அலுவலகம் இராணுவத்தினரைத் தண்டிப்பதற்கானது, இதன் மூலம் படையினர் காட்டிக்கொடுக்கப்படப்போ கின்றனர் என பகிரங்கமாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதற்கு அரசாங்கம் இவ் அலுவலகத்திற்கு நீதிமன்ற அதிகாரமோ அல்லது தண்டணை வழங்கும் அதிகாரமோ கிடையாது எனத் தெரிவித்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தத்தில் ஈடுபட்ட தலைவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களது கௌரவத்தினை ஏற்படுத்துவதற்குமானது என வெளிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இங்கு நோக்கத்தக்க விடயம் ஒன்று உள்ளது. அதாவது, காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இடம்பெறும் செயற்பாடுகள் படையினரைக் காட்டிக்கொடுப்பதற்கான முயற்சி என பதவியில் இருந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அச்சம் கொள்கின்றார். இதன் மூலம் அவரே படையினருக்கும் காணாமல் போனோரின் நிலைக்குமான தொடர்புள்ளதென ஏற்றுக்கொள்கின்றார்.
அதிகாரத்திற்காக பிரயத்தனப்படும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான எதிரணியினர்இ சிங்கள மக்களை வெல்வதற்கானதும் வாக்குகள் கவர்வதற்கானதுமான பாரிய உத்தி இது எனக் கொண்டே காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவது படையினரைக் காட்டிக்கொடுப்பதற்கானது என்கின்றனர்.
பாராளுமன்றின்னுள் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான வாசுதேவ நாணயக்கார தலைமை தாங்கியுள்ளார். பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே காணாமல் போனோருக்கான ஓர் அலுவலகத்தினைத் தாபிப்பதற்கான முயற்சிகளைக் கூட மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் இன்றும் நாட்டில் காணப்படுகின்றது. நாட்டில் பாரிய இனவாதமும் நீதியைப் பின்தள்ளுதலும் பொறுப்புக்கூறலில் இருந்து விடுபடுகின்ற நிலையும் ஒன்றும் குறைந்து போகவில்லை என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன
.
காணாமல் போனோர் அலுவலகம் பற்றிய சட்டமூலம் பற்றி கருத்துரைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உண்மை கண்டறியப்படும் முயற்சி ஒன்றுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது நல்லிணக்கத்திற்கான ஆரம்பம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பது, நல்லிணக்க வேளையில் அதற்காக தமிழ் மக்களின் நம்பிக்கையினை அரசுக்குத் தெரிவிக்கும் சமிக்ஞைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தளவில் காணாமல் போனோர் அலுவலகம் தன் பணியை நிறைவுறுத்தும் வரையில் அது பற்றி பலதரப்பட்ட சந்தேகங்கள் அவர்களிடம் இன்றும் உள்ளன. இதுபற்றி அவர்களிடம் கோரிக்கைகளும் உள்ளன
. காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம் என்பதை( office of missing persons) என்பதை கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியறியும் அலுவலகம் (office for Families of searching Handed kidnapped and forcible Disappeared) என்று மாற்றுமாறு நல்லிணக்க செயலணியிடம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியறியும் குழுவும் இணைந்து கோரியிருந்தன. அவர்கள் காணாமல் போனோர் என்ற வருகையில் அது பலாத்காரமாகக் காணாமல் போனோர் என்பதை அடையாளப்படுத்தவில்லை எனத் தெரிவித்திருந்தன.
இதற்கு அப்பால் காணாமல் போனோர் அலுவலகம் பற்றி இக் கட்டுரைக்காக காணாமல் போனோரின் குடும்பங்களுடன் பேசும் போது, இவ் அலுவலகத்தின் பிரதிநிதித்துவத்தில் அவர்களிடம் சந்தேகங்களும் கவலைகளும் உள்ளன. இவ் அலுவலகம் காணாமல் போனோரின் உறவுகளை உள்ளடக்காது அரசாங்கத்தின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலேயே அங்கத்தவர்களைக்கொண்டுள் ளது என்ற விமர்சனங்கள் உள்ளன.
இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான ஓர் நிறுவனமாகவே வடிவமைக்கப்படுகின்றது என்ற விமர்சனங்கள் காணாமல் போனோரின் குடும்பங்களிடத்தில் உள்ளன. காணாமல் போனோர் பிரச்சினையினைக் கையில் எடுத்து செயற்படும் பிரதிநிதிகளை இவ் அலுவலகத்திற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் உள்ளன என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இச் சட்டத்தினை உருவாக்குவதிலும் இச் சட்ட ஏற்பாடுகளுக்கும் முன்னதாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான போக்குகள்இ இவ் அலுவலகம் முன்வைக்கும் தீர்வினைக் காணாமல் போனோரின் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற துர்ப்பாக்கிய நிலையுடையதாக அமையக் கூடாது என்பதுவே பாதிக்கப்பட்டோரின் நிலைப்பாடாகவுள்ளது.
காலத்திற்குக் காலம் காணாமல் போனோர் விடயத்தில் ஆணைக்குழுக்களும் விசாரணைகளும் கொண்டு வரப்பட்டன. இறுதியாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகமவைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குழுவிடம் 19 ஆயிரத்திற்கும் மேலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் இவ் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்ட விதங்களில் பல்வேறு குறைபாடுகள் நிலவின.
மொழி பெயர்ப்புத் தவறுகள், சாட்சியங்கள் படையினரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள், பதில்களை ஆணைக்குழு ஏற்கனவே தாம் நிர்ணயித்து விட்டு உள்நோக்கங்களுடன் கேள்விகள் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக் குற்றச்சாடுக்களை மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக நிலைமைகள் காணப்படும் போது, இவ்வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா, காணாமல் போனோர் விடயத்தில் கடந்த கால விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு லேதிக விசாரணைகளை தொடரமுடியும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக காணாமல் போனோர் விடயத்தில் கடந்த கால ஆணைக்குழுக்களின் விசாரணைகள் முடிவுகளையும் அடிப்படையாக ஏற்றுக்கொண்டு தற்போதைய அலுவலகத்தின் செயற்பாடுகள் அமைந்தால் காணாமல் போனோர் விடயத்தில் தகுந்த தீர்வு அமையுமா என்ற கேள்வி பொதுவில் உள்ளது?
மேலும் காணாமல் போனவர்கள் தமது உறவுகளுக்காக ஏங்குபவர்கள். இவர்களின் விடயத்தில் இனிவருங்காலத்திலும் தாமதங்கள் பிரயோகிக்கப்படுமாயின் அது மக்களை மீளவும் பாதிக்கும் விடயமாகவே அமையும். தாமதிக்கப்படும் நீதியை மறுக்கப்படும் நீதி என்பார்கள். அந்த வகையில் தற்போது அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கையாவது பொருத்தமுடைய நியாயத்தினை காணாமல் போனோர் விடயத்தில் முன்வைக்க கூடியதாக அமையவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
காணாமல் போனோரைக் கண்டறியும் அலுவலகம் ஊடாக காணாமல் போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கல் காணாமல் போனோர் உயிருடன் இருந்தால் உறவுகளுக்கு அறிவித்தல் காணாமல் போனோர் புதைகுழிகள் பற்றி உறுதியான தகவல்கள் காணப்படுமாயின் அதனைத் தோண்டுமாறு நீதிமன்றங்களிடம் விண்ணப்பம் செய்தல் போன்ற செயற்பாடுகள் உள்ளடங்கும் தெரி விக்கப்பட்டுள்ளது.இந்த இடத்தில் காணமல் போனோரின் உறவுகள் தமக்கான நீதியைப் பொறுத்தளவில் எவ்வாறான மனப்பான்மையில் உள்ளனர் என்பது பற்றிய தெளிவான வெளிப்படுத்துகைகள் அவசியம்.
இந்த இடத்தில் காணாமல் போனோரின் கருத்துக்களும் பங்கேற்பும் அதிகம் காணா மல் போனோருக்கான அலுவலகத்தினுள் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் தொடரப் படவேண்டிய தேவையுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் நாட்டில் வெள்ளை வான்களிலும் ஆயுத முனைகளிலும் கடத்தப்பட்ட தமது உறவுகள் வீடுதிரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே எப்போதும் காத்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டும் உறவினரின் கண்கான சரணடைந்தும் இன்றுவரையில் வீடு திரும்பாதவர்கள் ஆயிரக்கணக்கில் இன்றும் காணாமல் போனோராக உள்ளனர்.
இவ்வாறாக நிலைமைகள் காணப்படுகையில் சர்வதேசத்தினையும் நடைமுறை அழுத்தங்களையும் சமாளிப்பதற்கான அணுகு முறையாக தற்போதைய அரசாங்கத்தின் காணாமல் போனோர் தொடர்பான அணுகுமுறைகள் அமையக்கூடாது என்பதுவே சகலரினதும் எதிர்பார்ப்பு.