உலகத் தமிழர்களின் இதய செல்வியாக கருதப்படுகின்ற தமிழக முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் மறைவு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
உலகத்தில் வாழுகின்ற பெண்களில் இரும்பு பெண்மணிகளாக புகழப்பட்ட மார்க்கரட் தட்சர், இந்திராகாந்தி ஆகியோருடன்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இரும்பு பெண்ணாக போற்றப்பட்டவர்.
அத்தகைய புகழ் வாய்ந்த ஜெயலலிதாவின் மறைவு உலகெங்கும் வாழுகின்ற பெண்களுக்கும் ஏனையவர்களுக்கும் பேரிழப்பாகும். இவர் கடந்து வந்த வாழ்க்கை ,வென்று வந்த வாழ்க்கை இதனை நினைத்துப் பார்க்கும் போது மனம் வெதும்புகின்றது.
தமிழக மக்களின் முதல்வராக இருந்து அளப்பெரிய சேவைகள் செய்த காரணத்தினால் தான் இன்று தமிழகமே அழுகின்றது. உலகத்தமிழர்களுக்காக அவர்களின் போராட்டங்களுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்.
அவரின் இழப்பால் இலங்கையில் வாழுகின்ற மலையகத் தமிழ் மக்களும் தாங்கிக் கொள்ள முடியாத துயரிலுள்ளனர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.