வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை நிலைய உயர் அதிகாரி பாலச்சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி உன்னிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் புதன்கிழமை (30) மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதே வேளை டிசம்பர் முதல் வாரம் மழை பெய்யும் என்ற சென்னை வானிலை நிலையத்தின் எச்சரிக்கையைடுத்து தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது என்று இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டமை குறிப்பஸடத்தக்கது.