சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையை மீட்டு வழிநடத்த புலிகள் போன்றதொரு தலைமை வேண்டும் – செல்வின் – நேர்காணல் – பகுதி 01

இலங்கையை மீட்டு வழிநடத்த புலிகள் போன்றதொரு தலைமை வேண்டும் – செல்வின் – நேர்காணல் – பகுதி 01

சமூக பொருளாதார ஆய்வாளரும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், ஆலோசகருமான செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணல்- பகுதி 01

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்த தங்கள் அவதானிப்பு என்ன ?

இலங்கையினுடைய தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றி வேறுபட்ட பல கருத்துக்கள் இருக்கின்றன. வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினைக்குள்ளும் ஒரு அந்நிய செலாவணி நெருக்கடியாக மட்டும் இதைப் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றது. மற்றையது இந்த அன்னியச் செலாவணி பற்றாக்குறைக்கு காரணம் அரசாங்கத் தரப்பில் காணப்பட்ட மிக மோசமான ஊழல்களும் தவறான அணுகுமுறையும் கரணமாக காணப்பட்டது. எனவே இந்த நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சேக்களை அகற்றி இன்னொரு அரசியல் தரப்பினை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த நெருக்கடியை தீர்க்கலாம் என்ற ஒரு வாதம் காணப்படுகின்றது. ஆனால் அடிப்படையில் இவை இரண்டையும் தாண்டிய பெறுமானம் இருக்கின்றதா என்பதை அறிவதில் பொதுமக்கள் ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நேரடியாக தங்களுடைய கோபத்தை வெளிக்காட்டும் தொனியில் இந்த ஆட்சியை மாற்றினால் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதன் ஒரு அங்கமாகத்தான் கொழும்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசாங்க தரப்பினர் குறிப்பாக ஜனாதிபதியும் நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த நெருக்கடியை தணிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறும் நோக்கில் அதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சி எந்தளவுக்கு சாத்தியம் ஆக்கப்படும் என்பது கேள்விக்குறியே.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்குவது எவ்வாறான விளைவுகளைத் தரும் ?

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது என்பது இலங்கையில் விவாதத்திற்குரிய விடயமாக மாறியிருக்கின்றது. 2020 ஆம் ஆண்டின் இறுதிக் காலம் தொடக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அணுகவேண்டும் என்றும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்ற வாதம் இருந்தது. ஆனால் ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் போவது தொடர்பாக ஒரு எதிர்மறையான எண்ணத்தையே கொண்டிருந்தார்கள். ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் என்பது சாதாரணமாக நன்கொடை வழங்குகின்ற இரு தரப்பு அல்லது பலதரப்பு நிறுவனம் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான நோக்கம் நாடுகள் அன்னிய செலவாணி நெருக்கடிக்குள் பிரவேசிக்கும்போது அந்த நெருக்கடிகளைக் களைந்து நாட்டினை ஒரு நிதானமான பாதையில் நிலைநிறுத்துவதற்காக தேவையான உதவிகளையும் இடையீடுகளையும் வளங்குதல், கடனை மறுசீரமைப்பாற்கான வாய்ப்புக்களைக் கொடுத்தல் உள்ளிட்ட திட்டங்களினை மேற்கொள்கின்ற ஒரு நிறுவனம் ஆகும்.
எனவே சர்வதேச நாணய நிதியத்தினைப் பொறுத்தவரை அது நிதி வழங்கும் நிறுவனம் வழங்கிய வழங்கும் நிறுவனம் அந்த அமைப்பிற்கு அரசசியல், சமூகம், சமூக வளர்ச்சி குறித்து எந்த அக்கறையும் இல்லை. பொருளாதாரத்தால் விழுந்து போன ஒரு நாட்டில் ஒரு உறுதியான பொருளாதாரத்தை எவ்வாறு கட்டமைத்து முன் கொண்டு செல்லலாம் என்ற ஒற்றை கொள்கை மட்டும்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் உள்ளது. அந்த நிறுவனத்திடம் உதவி நாடிச் செல்லும்போது அது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும். அந்த நிபந்தனைகள் மிக இறுக்கமான நிபந்தனைகள். அந்த நிபந்தனைகளை ஒரு நாடு ஒவ்வொன்றாக பின்பற்றிக் கொண்டு வந்தால்தான் அங்கு சர்வதேச நாணய நிதியம் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அந்த நாடு முன்னெடுக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியம் தன்னுடைய பங்களிப்பை மேற்கொள்ளாது கைவிட்டு விடும். எனவே சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது விடயமே நிபந்தனைகள் தான். அந்த நிபந்தனைகள் எப்பொழுதும் இறுக்கமான ஒரு பொருளாதாரத்தை, வீண் விரயத்தை, அரசாங்கத்தின் அனாவசிய செலவுகளை குறைப்பது ஆக இருக்கும். எனவே சிக்கனம், விரயத் தடுப்பு, அரச செலவினங்களைக் குறைத்தல் அரசாங்கத்தின் நிதிச்சுமையை குறைத்தல், அரச வருமானத்தை அதிகரிப்புதற்கு எவ்வாறு வரிகளை அதிகரிப்பது, கட்டற்ற வர்த்தம், கட்டற்ற ஏற்றுமதி இறக்கு போன்ற நிபந்தனைகளை விதிக்கும்.
சாதாரணமாக இலங்கை போன்ற சமூக நலச் செலவுகள் கூடிய நாட்டிலே அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகள், தாங்கள் தேர்தலில் வெல்வதற்காக சலுகைகள் நிவாரணங்களை அறிவிப்பார்கள். சர்வதேச நாணய நிதியம் அந்த விடயங்களில் மிக இறுக்கமாக இருக்கும். எனவே சமூக நலன்சார்ந்த அரசியலில் சலுகைகளைக் கொடுத்து வாக்குவங்கியைக் கவர்ந்து அரசியலுக்குள்வரும் அரசியல்வாதிகளுக்கு இந்த நிபந்தனைகள் சரிவர மாட்டாது. அடுத்துவரும் தேர்தல்களின் தாங்கள் வெற்றிபெறமுடியதமல் போகும் நிலைவரும் என்ற அச்சம் வருமாக இருந்தால் அவர்களின் கொள்கைகளை அமுல்ப்படுத்த முன்வரமாட்டார்கள். எனவே சமூக நலன்சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றும் தேசங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை அல்லது நிபந்தனைகளை உள்வாங்குவது என்பது மிகக் கடினமானது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள என்ன வழி ? எவ்வளவு காலம் செல்லும் ?

சர்வதேச நாணய நிதியத்தை அனுமதிப்பதுதான் ஒரே வழி. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெருந்தொகையான கடனைப் பெற்று தற்போதுள்ள சிறு சிறு கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடவேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சர்வதே நாணய நிதியத்தின் கடன்களை அடைத்துக்கொள்ளலாம். அதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை அமுல்ப்படுத்த வேண்டும். சர்வதேச நாயண நிதியம் கடன்களை மட்டும் வழங்கும் நிறுவனம் அல்ல பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிகளை வகுத்துத் தரும். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானமான நோக்கம் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைப்பதும், வருமானங்களை அதிகரிப்பதும் தான்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளூரில் வரிகளை அதிகரிக்கக் கூறும். அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வலியுறுத்தும். ஆனால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். எனினும் அதனை மேற்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். அரசாங்கத்தின் அனாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் உற்பத்தித்திறன் செயலாற்றுகை என்பது மிகப் பலவீனமானது இத்தகைய நிலையில் ஆட்களையும் குறைத்து சலுகைளையும் குறைக்கவேண்டும். இதன் மூலம் அரசாங்க துறையில் பாரிய மாற்றம் ஏற்படும்.
இதுவரை காலமும் இருந்துவந்த பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் கொள்கைகள், நடைமுறைகள் மீளவும் கடுமையான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு எந்தெந்தத் துறைகளில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்படவேண்டும். இது பொருளாதார மீள் கட்டமைப்பு என அழைக்கப்படும்.
இவை ஒரு நாளிலோ ஒரு வருடத்திலோ இரு வருடத்திலோ சாத்தியமற்ற விடயம். குறைந்தது ஐந்து வருடகாலமாவது செல்லும் அது தனது ஆரம்பப் படிநிலையைப் பூர்த்தி செய்வதற்கு. கிட்டத்தட்ட மீட்சியை நோக்கி நகர 10 ஆண்டுகள் வரை செல்லும். பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், தனியார்துறை, வங்கிகள், என அனைத்துத் தரப்பினரும் குறித்த திட்டத்திற்காக அல்லது கொள்கைக்காக உழைக்கவேண்டும். அவ்வாறான மிக நெருக்கடியான பயணம் ஒன்றை எல்லோரும் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும். அவ்வாறு மக்களையும் நிறுவனங்களையும் அணைந்து இழுத்து வழிகாட்டிக் கொண்டுசெல்வதற்கு பொருத்தமான ஒரு அரசியல் தலமை இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்விக்குறியே. சரி பிழைகள் என்பனவற்றுக்கு எல்லாம் அப்பால் மக்களை ஓரணியில் வழிநடத்த ஒரு சிறந்த தலைமை இலங்கையில் இருந்தது. அத் தலைமை இப்போது இல்லை. அவர்கள் தான் விடுதலைப் புலிகள்.

நேர்காணல் தொடரும்……

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com