அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்று (21) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக இன்றையதினம் (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைக்குள் நுழைந்து, இரண்டு தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் முழந்தாலிடச் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்றையதினம் (22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, இந்த சம்பவத்தை எவ்வித கருத்து வேறுபாடுமின்றி கண்டிப்பதாக தெரிவித்ததோடு, இது ஒருபோதும் நடக்கக் கூடாத ஒரு சம்பவம் என்றும் தான் கருதுவதாக தெரிவித்தார்.