யாழில் 800 பயனாளிகளுக்கு, வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், யாழ்.மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந் நிகழ்வு இடம்பெற்றது.
‘2025ஆம் ஆண்டு அனைவருக்கும் வீடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் தமது வீடுகளை அமைப்பதற்காகவும், பழைய வீடுகளை திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் 800 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை வீடமைப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.