சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் விடுத்த வேண்டுகோளை ஏகமாதாக ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாணசபை சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்த விஷேட நடவடிக்கை குழு உருவாக்குவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (23) காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன்போது கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த குழுவை உருவாக்க வேண்டும். அதில் வடமாகாண சபை உறுப்பினர்கள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் , பொலிசார் , சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் ,ஆகியோரை உள்ளடக்கி இந்த குழு உருவாக்கபடவேண்டும். அந்த குழுவின் ஊடாக பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரணை முன்மொழியப்பட்டது.
அதனை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிய எதிர்ப்பின்றி பிரேரணை ஏக மனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.
ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைக்க வேண்டும்.
குறித்த பிரேரணை வழி மொழியப்பட்ட பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் இந்த குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைக்க வேண்டும். துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் தொடர்பிலான செய்திகளை வெளியிடும் போது பொறுப்புணர்ச்சியுடன் வெளியிட வேண்டும். இந்த செய்திகளை ஒரு வரையறைக்குள் வெளியிட வேண்டும்.
எனவே இந்த குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரினார்.
எதிர்கட்சி உறுப்பினரின் அந்த கோரிக்கையையும் சபை ஏக மனதாக ஏற்றுக்கொண்டு விசேட நடவடிக்கை குழுவில் ஊடகங்களை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளவது என தீர்மானிக்கப்பட்டது.