பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது தலைமை மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பரிசோதனையை மேற்கொண்ட போது, தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
சிறியளவிலான காய்ச்சல் மற்றும் தொடர்ச்சியான இருமல் ஏற்பட்டுள்ளதனால் தாம் சுயமாகவே தனிமைபடுத்திய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், தாம் நாட்டின் நிர்வாகத்தை தொடர்ந்தும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், தமது வழமையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை தமது வீட்டில் இருந்து மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தாம் நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதன் காரணமாக எந்தவிதமான பாதிப்பும் இன்றி வீட்டில் இருந்தபடி தமது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது உயர்மட்ட குழுவினருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கொரோனா வைரஸ் உயிர் கொல்லியை அழிக்கும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதாகவும் பிருத்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேசத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆட்கொல்லியை முற்றாக அழிப்பதற்கு சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடலிலன் போதே இந்த கருத்தினை அவர் வெளியிட்டார்.
தொற்று தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அண்மை வாரங்களில் மாறுபட்ட கருத்து மோதல்கள் வெளிப்பட்டிருந்தன.
கொரனா வைரஸ் நோயை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பும், ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் ‘சீன வைரஸ்’ என தொடர்ந்தும் வெளிப்படுத்திய கருத்து காரணமாக சீனா சீற்றம் அடைந்திருந்தது.
ஆனால், தற்போது, தொற்று தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள இரு தலைவர்களும் கொள்கையளவில் இணங்கியுள்ளனர்.
இது தவிர, சீனாவின் சில மாகாணங்களில் உள்ள ஒளடத உற்பத்தி நிறுவனங்கள், ஒளடதங்களையும், மருத்துவ உபகரணங்களையும் அமெரிக்காவிற்கு விநியோகித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சர்வதேச ரீதியில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 474 பேர் கொவிட்-19 தொற்று உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் சர்வதேச ரீதியில் 24 ஆயிரத்து 883 பேர் பலியாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 701 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.