தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவின் வழிகாட்டுதலிலேயே செயற்படுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டுவதாக சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிடுவது உண்மைதான் என குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் தமக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போது தான் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா விரும்பவில்லை என தமக்குத் தெரிவித்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடனான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணைந்து புதிய கூட்டு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் அது தொடர்பில் சி.வி.விக்கினேஸ்வரன் விளக்கமளித்திருந்தார். அதன்போதே தன் மீது முன்னணி அபாண்ட குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் தன்னை இந்தியா வழிநடத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்குப் பதிலளித்து இன்று ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விக்கினேஸ்வரனை இந்தியா வழிநடத்துவது உண்மைதான் என குறிப்பிட்டிருக்கிறது.
இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இந்தியாவின் வழிகாட்டுதலில்தான் நீதியரசர் செயற்படுகின்றார் என்று நாம் குற்றஞ்சாட்டுவதாக நீதியரசர் அவர்கள் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை 2018.10.06ம் திகதி அன்று நாம் சந்தித்தவேளை நீதியரசரே தான் சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் ‘தான் எம்முடன் இணைவதை விரும்பவில்லை’ என்றும் ‘ஏன் இந்தியா உங்களை எதிரியாக பார்க்கின்றது?’ என்றும் கேட்டிருந்தார்.
இந்தியாவின் நலன்களுக்காக மட்டுமே செயற்பட்டுவருகிறார்கள் என்று தமிழ் மக்களால் கருதப்படும் EPRLF கட்சி இன்றி அரசியல் கூட்டு இல்லை என்றும் EPRLF உடனான தனது கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணையத் தயாரில்லை என்றால் EPRLF கட்சியுடன் தனித்து கூட்டிணைந்து செயற்படபோவதாகவும் ஓர் நிலைப்பாட்டை நீதியரசர் எடுத்திருப்பது மிகவும் வேதனையான ஓர்விடயம் என்பதுடன் அது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முற்றாக சீரழித்துவிடும் என்பதையும் மிகுந்த பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தழிழ் மக்களின் கொள்கைளை முன்னிறுத்தி பயணிப்பதாக உறுதிமொழி அளித்து விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் பின்னர் அக் கூட்டமைப்பானது இன்று கொள்கை வழிமாறி தடம்மாறி பயணிப்பதால் தமிழ் மக்கள் அதனை நிராகரிக்க வேண்டும் என இன்று நீதியரசரும் நாங்களும் எதற்காக கோருகின்றோமோ அதே நியாயமான காரணத்திற்காகவே EPRLF கட்சியையும் நிராகரிக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம். – என்றுள்ளது.