சாமிமலை கவரவெல தோட்டத்தில் கற்பாறை சரிவு அபாயத்தினால் கவிரவெல ஆரம்ப பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள 17 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரை தற்காலிக இருப்பிடமொன்றில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஏற்பட்ட மேற்படி அபாய நிலையைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அனர்த்த நிலையை பார்வையிடச் சென்ற அமைச்சர் திகாம்பரம் அங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக இருப்படங்களை அமைத்துக்கொடுப்பதற்கான கூரைத்தகடுகளை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அம்மக்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக்கொடுப்பதற்காக அங்கு ஆராய சென்ற மத்திய மாகாண சபை உறுப்பினரோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பிலிப் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அமைப்பாளருமான சுரேஸ் ஆகியோரும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தனர்.
அவ்வேளையில் மேலதிக கூடாரங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டதால் உடனடியாக மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் அம்பகமுவ பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து அம்பகமுவ பிரதேச செயலாளர் 10 தற்காலிக கூடாரங்களை தருவதாக ஒப்புக்கொண்டார். இக் கூடாரங்கள் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து கவரவில ஆரம்ப பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருக்கிருன்றது.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் இவ்வாரத்திற்குள் தற்காலிக குடியிருப்புக்களுக்கு செல்வதால் பாடசாலை கல்வியில் அசௌகரியங்களை எதிர்கொண்ட கவரவில ஆரம்ப பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்புமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.