தவிசாளர் தெரிவுக்கு வழி மொழிவதற்கு யாரும் முன்வராத நிலையில் தன்னைத் தானே வழி மொழிந்த சம்பவம் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் இன்று நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வனேந்திரன் சுரேந்திரனின் பெயரினை வேலாயுதம் புவிதாஸன் முன்மொழிந்தார் இவரை வழிமொழிவதற்க எவரும் முன்வராத நிலையில் தன்னை தானே வழி மொழிந்தார்.
மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வு வியாழக்கிழமை (05) மாலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளர் தெரிவுக்கான திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக நாகமணி கதிரவேலின் பெயரினை எஸ்எம்.முகமது ஜௌபர் முன்மொழிந்தார் அதனை சீனி முகமட் கமால்டீன் வழி மொழிந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் நவரெத்தினம் திருநாவுக்கரசுவின் பெயரை நல்லலையா சரஸ்வதி முன்மொழிய நிர்மலா சிவமூர்த்தி வழிமொழிந்தார்.
இதற்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வனேந்திரன் சுரேந்திரனின் பெயரினை வேலாயுதம் புவிதாஸன் முன்மொழிந்தார் இவரை வழிமொழிவதற்க எவரும் முன்வராத நிலையில் தன்னை தானே வழி மொழிந்தார். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து தானாகவே விலக்கிக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சின்னத்துரை சர்வானந்தனின் பெயரினை முன் மொழிந்தார் அதனை சர்வானந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த வேலாயுதம் புவிதாஸன் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேரந்த காளயப்பன் ராமச்சந்திரனின் பெயரை முன்மொழிந்தார் அதனையும் அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் குடியிருப்பு வட்டாரத்ததைச் சேர்ந்த நாகமணி கதிரவேல் 18 வாக்குகளைப் பெற்று தவிசாளரா தெரிவு செய்யப்பட்டார்.