சற்று முன்
Home / Uncategorized / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முஸ்லீம் தலமைகள் தகுதியற்றவர்கள் – இப்படிச் சொல்கிறார் அஸ்மின்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முஸ்லீம் தலமைகள் தகுதியற்றவர்கள் – இப்படிச் சொல்கிறார் அஸ்மின்

முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்  நேற்றையதினம் (10-11-2017) வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டார் அவர் மேலும் அங்கு உரை நிகழ்த்துகையில்,

உள்ளூராட்சித் தேர்தல்கள் அண்மையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக ஒரு சில அறிவித்தல்கள் வெளிவந்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வடக்கிலே தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து அதனூடாக அரசியல் இலாபமீட்டும் ஒரு சில அரசியல் வியாபாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக போலிப் பிரச்சாரங்களை இப்போது முன்னெடுத்துவருகின்றார்கள். மழை வரப்போகின்றது என்றது ஆண் மயில் தோகை விரித்தாடுமாம் அதேபோல இந்த அரசியல் வியாபாரிகளின் இனவாதப் பேச்சுக்களும் ஒரு தேர்தல் வரப்போகின்றது என்பதற்கு அறிகுறியேயாகும்.

இந்த அரசியல் தலைவர்கள் 2004ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை (14வருடங்கள்) அல்லது இதனைவிடவும் கூடுதல் காலம் அமைச்சர்களாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் இன்றுவரை வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்களில் 25% முன்னேற்றம் தன்னும் ஏற்படவில்லை; இது எதனைக் குறிக்கின்றது, கடந்த 14 வருடங்களாக தாங்கள் அமைச்சர் கதிரைகளில் இருந்து எதனையும் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகப் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது, இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிசொல்ல முயற்சிக்கின்றீர்கள். இது மக்கள் நலன்சார்ந்த அரசியலாக இருக்க முடியாது.

அமைச்சரவையிலே வடக்கு முஸ்லிம் மக்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட மக்கள் என்றோ, அவர்களுடைய மீள்குடியேற்ற விவகாரங்கள் ஒரு சில பிரத்தியேகமான கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றோ, காணி, வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளில் பேணப்படவேண்டிய முறைமைகள் குறித்தோ எவ்விதமான உருப்படியான கொள்கைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை. நீங்கள் மேற்கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே வடக்கில் இருக்கின்ற அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். முறையான தீர்மானங்களை அமைச்சரவையில் நிறைவேற்றியிருந்தால் இந்த மக்களின் மீள்குடியேற்றம் சீரானதாக அமைந்திருக்கும். அதைவிடுத்து உங்களுடைய கட்சிக்கு வேலை செய்தவர்கள், உங்களுக்கு வால்பிடித்தவர்களுக்கு எல்லாம் வீட்டுத் திட்டம், காணிப் பகிர்ந்தளிப்பு, வாழ்வாதார வசதிகள் என்று பட்டியலிட்டு மக்களையும் சீர்கெடுத்துவிட்டு; உங்களுடைய அரசியல் எதிரிகளைப் பழிவாங்குகின்ற இடமாக மீள்குடியேற்ற செயற்பாடுகளைப் பயன்படுத்திவிட்டு; உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினர்க்கும் சொத்துக் குவிக்கின்ற வாய்ப்பாக மீள்குடியேற்றத்தைப் பாவித்துவிட்டு; இப்போது முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தடையாக இருக்கின்றது என்று சொல்வது; உங்களுடைய இயலாமையினையும், இனவாதத்தை வளர்த்து அதிலே குளிர்காய நீங்கள் முயற்சிக்கின்றீர்கள் என்பதையுமே சுட்டிக்காட்டுகின்றது.

வடக்கிலே முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது, அதிலும் குறிப்பாக தமிழ் மக்களினால் அது பாரிய சந்தேகக்கண்கொண்டு நோக்கப்படுகின்றது. இதனை சீர்செய்யவேண்டிய பொறுப்ப தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களுக்கும் இருக்கின்றது. 2013களிலே இதனைச் சீர்செய்யும் ஒரு முயற்சியாகவே நான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன், இதனை தங்களுடைய பிராந்திய அரசியலுக்காகப் பயன்படுத்த ஒரு சிலர் முயற்சித்தார்கள், அவர்களுடைய முயற்சி தோல்வியடையவே நான் பதவி விலகவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள், ஆனால் அதனை நான் பொறுட்படுத்தவில்லை,  வடக்கு முஸ்லிம்களாகிய எமக்கு அவசியப்படுவதெல்லாம் “வடக்கில் எமது மக்களின் இருப்பை உறுதிசெய்வது” மாத்திரமேயாகும். தமிழ் அரசியல் தலைவர்கள் இதுவிடயத்தை நன்கு புரிந்திருக்கின்றார்கள், எமது முஸ்லிம் மக்களை வரவேற்கின்றார்கள், பழைய தவறுகள் சீர்செய்யப்படல் அவசியம் என்று பகிரங்கமாகக் கூறுகின்றார்கள். முஸ்லிம் மக்களின் விடயங்கள் சீராக முன்னெடுக்கப்படல் அவசியம் என்பதில் அவர்களுக்கு உடன்பாடுகள் இருக்கின்றன, இவ்வாறான ஆரோக்கியமான சூழ்நிலைகளை எவரும் தங்களுடைய சுயநல அரசியலுக்காகக் குழப்பிவிடக்கூடாது. எந்தப் பிரச்சினைகளையும் அவற்ற அணுகுவதற்கு உரிய முறையில் அணுகி மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் குறிப்பிட்டார்.

அண்மையில் வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதமொன்றில் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com