நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள இயக்குநர் செல்லாவிடம் பேசினோம்.
” ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் நான் வேலை செய்தேன். அதனால் விஷ்ணு சார் பழக்கம். அப்போது ஏதாவது காமெடி ஸ்க்ரிப்ட் இருந்தால் சொல்லச் சொன்னார். அவரிடம் சொன்ன கதைதான் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. காமெடி ஜானரான இந்தப் படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெஜினா ஸ்கூல் டீச்சராக வருவார். சிலுக்குவார் என்னும் ஊரில் நடக்கும் கதைதான் இந்தப்படம். படத்துக்கு ஏன் இந்தப் பெயர் என்று சிலர் கேட்டார்கள். சிலுக்குவார் என்னும் ஊரில் விஷ்ணு போலீஸாக இருக்கிறார். இப்போது எல்லாருக்கும் போலீஸ் என்றாலே சிங்கம் படம்தான் நம் நினைவுக்கு வரும். அதனால்தான் இந்தப் பெயர்” என்றவரிடம், படத்தில் ஓவியா நடித்திருப்பது பற்றி கேட்டோம்.
”இந்தப் படத்தில் ஓவியா ஒரு திருவிழா பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். கூடவே, நான்கு சீன்களிலும் நடித்திருக்கிறார். இந்தத் திருவிழா பாடலுக்கு ஓவியா நடனம் ஆடினால் நன்றாகயிருக்கும் என்று விஷ்ணுவிடம் கேட்டேன். அவரும், ஓவியாவிடம் பேசினார். எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ஓவியா இருக்கும்போதுதான் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அழைப்பு வந்திருப்பதாக அவர் கூறினார். அவர் செட்டில் எப்படி உற்சாகமாக இருந்தாரோ, அதேபோல்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் இருந்தார். இந்தப் படத்தில் ஓவியா ஆடியிருக்கும் நடனம் அவரது ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும்” என்று முடித்தார் இயக்குநர்.