சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயூதங்களை உரிய முறையில் அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் மே மாதம் 06 ஆம் திகதி வரையிலான காலபகுதியை பொது மன்னிப்பு காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
துப்பாக்கிக் கட்டளைச் சட்டத்தின் 30 ஆவது வாசகத்தின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016 மார்ச் மாதம் 5 ஆம் திகதி கையொப்பமிடபட்ட விஷேட வர்த்கதமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவ்வாறு உரிய முறையில் கையளிப்பவர்களுக்கென வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய பொது மன்னிப்பு வழங்கப்படும் மேற்படி காலத்திற்குள் சட்டவிரோதமான முறையில் தம் வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் கையளிக்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். சட்டவிரோதமாக ஆயுதங்களை உரிய முறையில் அரசாங்கத்திடம் கையளிப்பதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டமும், ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி, பாதுகாப்பு அமைச்சின் சிவில் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மேலதிகச் செயலாளர் என். ஜி. பண்டிதரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிகேடியர் ஜயனாத் ஜயவீர ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளிக்கையில்,
நாட்டில் தற்பொழுது சுமுகமான நிலைமை உருவாகியுள்ளமையினாலும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் சட்டவிரோத ஆயுதங்களை இல்லாமால் செய்வது காலத்தின் கட்டாய தேவையான விடயம் என்பது தொடர்பில் பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது. அதன் பின்னரே மேற்படி பொது மன்னிப்பு வழங்குவது என தீர்மானிக்கப்ட்டு அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமபகும் எனினும் இந்த பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் கையளிப்பவர்களுக்கு தண்டனை வழங்கவோ தண்டப் பணம் அறவிடவோ மாட்டாது மாறாக ஆயுதங்களை கையளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சன்னத்துப்பாக்கி அல்லது அதற்கு சமமான ஆயுதங்களை (கல்கடஸ்/கட்டுத்துவக்கு) கையளிப்பவர்களுக்கு 5000 ரூபாவும், பிஸ்டல்/ரிவால்வர்களை கையளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும் ரீ 56 ரக ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும் சன்மானமாக வழங்க தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
மே மாதம் 6 ஆம் திகதியின் பின்னர் சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் வகையில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கலந்து கொணடனர்.