கொட்டகலை 60 அடி பாலத்தின் திருத்த பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில்; பரீட்சார்த்த புகையிரதம் இன்று காலை 11.00 மணியளவில் பாலத்தினூடாக செலுத்தப்பட்டு உறுதிசெய்ததன் பின் இப்பாலத்தின் ஊடாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதமும் பயணித்தது. இதனைத்தொடர்ந்து இவ்வீதியினூடான புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பின.
கொழும்பு பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 வது மைல் கட்டைப்பகுதியில் கடந்த 13ம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் புகையிரதப் பெட்டிகள் நான்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் புகையிரத பெட்டிகளுக்கும் தண்டவாளங்களுக்கும் 60 அடி பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஈடுபட்டு அதனை சீர் செய்து அதனை தொடர்ந்து இந்த பாலத்தின் ஊடாக பரீட்சாரத்த புகையிரதம் ஒன்று அனுப்பி சோதனை செய்த பின் புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.