முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் இன்று(28) இயற்கை எய்தினார்.
1933 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி பிறந்த இவர் ஒரு வழக்கறிஞராவார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த இவர் இக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார்.
2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும், அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார்.
2001 இல் தமிழ்க் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தனர். 2001 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார்.
2004 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார்.எனினும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.
2010 ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்தோடு தமிழ்க் காங்கிரசும் விலகியது. ஆனாலும், விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து நீடித்தார்.
2010 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.