ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியமை தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் தான் விமர்சித்திருந்த கருத்துக்களை மீளப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடும் சர்ச்சைகளோடும் வாக்குவாதங்களோடும் நேற்று (08) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு முட்டாள்தனமானது என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு, செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் காரசாரமான பதில் கருத்துக்களை கூட்டத்தின் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
இதன்போது கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தமை தவறு என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து சுமந்திரன், சம்பந்தன் தவறு என்று சொல்வதால், நான் தெரிவித்த கருத்துக்களை மீளப் பெறுகின்றேன் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தை நான் படித்துப் பார்த்துத்தான் எனது மனச்சாட்சிக்கு அமைவாக கையெழுத்திட்டேன். 2011ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் எனது சொந்தப் பணத்தில் சென்று வருகின்றேன். அங்கு நடக்கின்ற விடயங்கள் கொஞ்சமாவது எனக்குத் தெரியும். நான் கையெழுத்திட்டமைக்காக என்னைக் கட்சியிலிருந்து நீக்கப் போகின்றீர்களா ? என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள் என்று குறிப்பிட்டார்.
புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த் தன், வழங்கிய கால அவகாசத்தில் அரசு எதுவும் செய்யவில்லை. மேலதிக கால அவகாசம் வழங்குவதால் செய்யும் என்ற நம்பிக்கையும் இல்லை. நாம் கால அவகாசத்துக்கு ஆதரவளித்து, இலங்கை அரசு செய்யாவிடில் அதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது – என்றார்.
ஐ.நா. ஆணையாளருக்கு அனுப்பிய அறிக்கையில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டவர்களில் மூவர் கையெழுத்திடவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலும் சர்ச்சை மூண்டது. கையெழுத்திடவில்லை என்று சுமந்திரனால் தெரிவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனைப் பார்த்து செல்வம் அடைக்கலநாதன், ‘நீர் கையெழுத்து வைத்ததை மறுத்துள்ளீரா ?’ என்று கேட்க, அவர் தான் எந்தவொரு சந்தர்பத்திலும் அப்படிச் சொல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நேற்று (நேற்றுமுன்தினம்) வேறுமாதிரிச் சொன்னார். இப்போது வேறுமாதிரிச் சொல்கின்றார் என்று பதிலளித்தார்.
இந்தச் சூடான மோதலின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஐயா (சம்பந்தன்) இப்போது இந்தக் கூட்டம் கூட்டி கேட்பதை விட முன்னரே இது தொடர்பில் அழைத்துப் பேசியிருக்கலாமே என்று கேட்டார். அதற்கு இரா.சம்பந்தன், எமது பக்கம் தவறு நடந்துள்ளது.
பத்திரிகையாளர் ஜெனிவா விடயம் தொடர்பில் என்ன நிலைப்பாடு என்று தொடர்ச்சியாகக் கேட்டு அழுத்தம் கொடுத்தனர். இதனால் நான் அவசரப்பட்டு விட்டேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்று கூறி சந்திப்பை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இக் கூட்டத்தில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.