மலையகத்தின் அபிவிருத்தியினை முன்னெடுக்க பத்தாண்டு அபிவிருத்தி திட்டத்தினை முதலில் அறிமுகப்படுத்தியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான். இத்திட்டம் குறித்து பேசுவதற்கு வேறு யாருக்கும் அருகதையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினரும், உப தலைவருமாகிய ஏ.பி.சக்திவேல் அவர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் நானுஓயா கிளாசோ ஆடிவன் பிரிவில் சனசமூக மண்டபம் மக்கள் பாவனைக்காக 24.02.2017 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண விவசாயதுறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுப்படுவது குறைவாகவே காணப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. காரணம் இன்றைய வாழ்வாதார நிலையில் அவர்களின் ஊதியம் அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்பதையும், தோட்ட நிர்வாக அதிகாரிகள் கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதனால் ஏற்படும் சிக்கல்களை இம்மக்கள் எதிர்கொள்வதனால் இந்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.
கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறி செயற்படும் தோட்ட அதிகாரிகள் எமக்கு வேண்டாம். காரணம் இவர்கள் தொழில் திணைக்கள சட்டங்களை மீறி செயல்படுகின்றனர். புதிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது போல் தோட்ட தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்கவில்லை.
ஆனால் ஒப்பந்த கூட்டு ஒப்பந்த மீறல்களை தோட்ட நிர்வாகங்கள் அவர்களின் அதிகாரிகளுடன் மீறி வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகையால் எதிர்வரும் தினங்களில் ஒரு தினத்தை இ.தொ.கா தொழிலமைச்சருடன் கேட்டுள்ளது, இதன் அடிப்படையில் திகதி ஒதுக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் சம்மந்தம் தொடர்பிலும், கைச்சாத்திடப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளையில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் திறன் அபிவிருத்தி கொடுப்பனவான 140 ரூபாயை வழங்காத தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும்.
ஆனால் சில தோட்டங்களில் முறையாக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மலையக அபிவிருத்தி தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தோட்ட பகுதிகள் அபிவிருத்தி இ.தொ.காவூடாக ஆரம்ப காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எம்மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மை காரணத்தினால் அனைத்து உரிமைகளையும் பெறுவதில் நாம் சிதரப்பட்டு காண்கின்றோம்.
ஆகையால் முதலில் நம்மிடம் ஒற்றுமை காணப்பட வேண்டும். ஒற்றுமையை பலப்படுத்தும் பொழுது வெற்றிகளை பெற முடியும் என்பதில் இ.தொ.கா தெளிவாக இருக்கின்றது. மலையக அபிவிருத்திக்கென இ.தொ.காவினால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை இன்று உள்ளவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஆக மலையக அபிவிருத்தி திட்டத்திற்கு விதையிட்டது இ.தொ.கா தான். எதிர்வரும் காலத்தில் மக்களின் ஒருமித்த ஒற்றுமை ஓங்க வேண்டும். அப்போது நாம் நினைத்த காரியங்களை வெற்றிக்கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.