பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா். நேற்று கிளிநொச்சிக்கு பயணம் செய்த சம்மந்தனிடம் இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா் மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினா் நேசிப்பதாக கூறும் அதே தமிழ்த்தேசியத்தை நாங்களும் நேசிக்கின்றோம், அதற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை செய்திருக்கின்றோம், அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக வடக்கில் கிழக்கில் மலையக மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனா். ஆனால் இவா்கள் இன்றும் மாற்றான் தாய் மனப்பாங்குடன்தான் நடத்தப்படுகின்றமை மிகுந்த மனவேதனையளிக்கிறது. எனவே மலையக மக்கள காயப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மோசமான சொற் பிரயோகங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றோம் எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மகஜரைப் பொருட்படுத்தாது நடந்துகொண்டதாகவும் அது தொடர்பில் உரையாட மனமற்றவராய் மௌனமாக சென்றுவிட்டதாகவும் மகஜர் கையளித்த மக்கள் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.