பௌத்தம் தொடர்பான ஏற்பாடுகள் பற்றி புதிய அரசியலமைப்பில் பிரச்சினை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என சிங்கள மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்ததற்கும் அப்பால் சென்றுஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பௌத்தத்திற்கான முன்னுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகவே பிரதமரின் இக் கருத்தினை நிராகரித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கள மக்களிடத்தில் சென்று இவ்வாறு தெரிவித்திருந்தபோதும் இவ்விடயம் தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் சென்றடைவதற்குத் தாமதம் எடுக்கவில்லை. அரசியலமைப்பு சகல இனங்களுக்கும் உரிய ஒன்று என்ற ரீதியிலும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுக்காக அரசியலமைப்பு மாற்றத்தினை எதிர்பார்த்திருக்கின்றனர் என்ற வகையிலும் அரசாங்கத்தின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ்த் தரப்புக்களிடத்தில் விசனத்தினை ஏற்படுத்தியிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் பிரதமரின் கருத்து தமிழ் மக்களிடத்தில் நல்லிணக்கம் தொடர்பாக கொண்டிருக்கும் சந்தேகங்களை ஒருபடி உயர்த்துவதாகவும் உள்ளது.
நாட்டில் காலத்திற்குக் காலம் பதவி ஏற்ற அரசாங்கங்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர் வினை முன்வைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை நிவர்த்திக்காது இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணங்களால் தோற்றம் பெற்ற மோதல்களைத் தீர்ப்பதற்கு அல்லது அடக்குவதற்கே இனப்பிரச்சினைத் தீர்வு என முன்னுரிமை வழங்கி வந்தன. அவ்வாறானதோர் நிலைமை தான் இன்றும் நிலவுகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடத்தில் கணிசமாகக் காணப்படுகின்றது. அச் சந்தேகங்களுக்கு அரசாங்கத்தின் இவ்வாறான சம்பாஷனைகள் வலுச்சேர்ப்பதாகவும் அமைகின்றன.
சிங்கள மக்களுக்கு ஏனைய இனங்களைக் காட்டிலும் அளிக்கப்பட்ட அரச அனுசரணைகளும் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன
ரீதியிலான மற்றும் மத ரீதியிலான பாரபட்சங்களும் இனப்பிரச்சினையில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவ்வாறு நிலைமைகள் காணப்படுகையில்இ நாட்டில் உள்ள சகல இனத்தவர்களும் இலங்கையர் என்ற அடிப்படைக்குள் வரவேண்டுமாயின் சகலரும் சமமாக மதிக்கப்படத்தக்க அரசியலமைப்பும் அதனை நடைமுறைப்படுத்தலுக்குமான அவசியமுமே நாட்டிற்கு அவசியமானது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
நடைமுறையில் உள்ள இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை பௌத்த சாசனத்தினை பேணி வளர்த்தலும் பேணிப்பாதுகாத்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனவும் நடைமுறையில் உள்ள யாப்பு தெரிவிக்கின்றது.
நாட்டில் பல்லினங்களும் பல் மதங்களும் பூர்வீகக் குடிகளாக வாழுகின்ற நிலையில் குறிப்பிட்ட ஓர் இனத்தினதோ மதத்தினதோ அடையாளங்களை மாத்திரம் அரசாங்கத்தின் விசேட கரிசனைக்கு உட்படுத்துவது நல்லிணக்கத்திற்கான உத்தியாக அமையாது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போக்குகளில் பௌத்த சிங்கள மயமாக்கம் ஓர் முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றது.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தமிழ் மக்கள் எதிர்க்கின்றனர். தமிழ் மக்கள் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை இனவாதத்தின் அடிப்படையிலோ அல்லது மதவாதத்தின் அடிப்படையிலோ எதிர்க்கவில்லை. வரலாற்று ரீதியாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு இருக்கின்ற அரச அங்கீகாரம் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான பின்னர் காணப்படுகின்ற இராணுவ ரீதியிலான அனுசரணைகள் போன்றவற்றின் மத்தியில் தமிழர்களுடைய அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதனை கற்றுக்கொண்டதனாலேயே தமிழ் மக்கள் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.
தமிழ் மக்களின் இனரீதியிலான அடையாளங்களையும் பண்பாட்டையும் தொன்மையையும் வரலாற்றையும் இருப்பினையும் மறுக்கின்ற வகையிலேயே வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள மயமாக்கம் நடைபெறுகின்றது. தமிழ் மக்களில் கணிசமானோருக்கு புத்த பிரானின் போதனைகளில் மதிப்பும் நம்பிக் கையும் உண்டு. எனினும் பௌத்த விகாரை கள் அமைக்கப்படுவதை தமிழ் மக்கள் எதிர் க்கின்றனராயின் பௌத்தத்திற்குள்ளாக வடக் குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரசியல் காரணமாகவே ஆகும். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகளில் அரசியல் ரீதியில் பௌத்த கோயில்கள் ஆக்கிரமிப்பின் உத்தியாக பயன்படுத்தப்படுகின்றமை தமிழர்களிடத்தில் பௌத்தத்தினை வடக்குக் கிழக்கில் ஏற்க முடியாததற்கான காரணமாகவுள்ளது.
இலங்கை அரசியலும் பௌத்த சிங்களமும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் சட்டரீதியிலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பேணப்பட்டுள்ளன. இது ஏனைய இனங்களை தாய்நாட்டிற்குள்ளேயே அந்நியப்படுத்துவதாகவுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தரணியும் அரசியலமைப்பினைத் தயாரித்துவரும் பிரதான வழிநடத்தல் குழுவின் அங்கத்தவருமான பராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்னவும் அண்மையில் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அளிக்கப்படும் இடம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
அதில் அவர் இலங்கையின் பிரதான மதமாக பௌத்தமதம் குறிப்பிடப்பட்டுள்ளபோதும்
அரச மதமாக பௌத்தம் குறிப்பிடப்படவில்லை என்றார். பாகிஸ்தான்இ மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் அரச மதமாக இஸ்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இலங்கையில் இல்லை என்பதை தெரிவித்தார். அவரும் இதுவரையில் பௌத்தம் எவ்வாறு முன்னுரிமைப் படுத்தப்பட்டிருந்ததோ அதேபோன்று தொடர்ந்தும் முன்னுரிமைப்படுத்தப்படும் என்றே கூறினார். இவற்றிலிருந்து அரசியலமைப்பு மாற்றத்துடன் தொடர்பு பட்ட பெரும்பான்மையோர் இடது சாரிகளாக இருந்தாலேன்ன வலது சாரிகளாக இருந்தாலேன்ன நடைமுறையில் அரசில் காணப்படும் பௌத்தத்திற்கான முன்னுரிமையினைத் துறக்க விரும்புகின்றனர் இல்லை என்பது தெளிவாகின்றது. புதிய அரசியலமைப்பில் ஏனைய இனங்களிடத்தில் எதாவது ஒருவகைத் திருப்திப்படுத்தல்களின் ஊடாக பௌத்தத்திற்கான முன்னிலைப்படுத்தலையே விரும்புகின்றனர் என்பது புலனாகின்றது.
பௌத்தமதம் இலங்கையின் பிரதான மதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அரச மதமாகக் காணப்படவில்லை என்பது அரசியலமைப்புச் சட்ட ரீதியிலும் சட்ட விவாதங்களின் அடிப்படையிலும் சரியானதாக அமைகின்றது. ஆனால்இ நடைமுறை ரீதியில் பௌத்தமே இலங்கையின் அரச மதமாக பேணப்படுகின்றது என்பதனை நாட்டு மக்களால் சாதாரணமாகவே கண்டுகொள்ளவும் உணரவும் முடிகின்றது. இதனால் கணிசமானளவு ஏனைய மதத்தவர்கள் பாரபட்சம் காட்டப்படுகின்றனர் என்பது யதார்த்தமாகும்.
மதசார்பற்ற அரசியலமைப்பு ஏற்படுவது பல்லினங்களையும் அங்கீகரிக்கின்ற மனிதத் தன்மை மிக்க ஓர் முற்போக்கான நடவடிக்கையாகும். ஆரசாங்கத்தினைப் பொறுத்தளவில் நடைமுறையில் இருந்துவந்த பௌத்தத்திற்கு முன்னுரிமை அளித்தல் என்னும் கொள்கையினை மாற்றி மதசார்பற்ற ஓர் அரசினை ஸ்தாபிக்கும் போது பௌத்த சிங்களவர்களில் பிற்போக்கான சிந்தனையுடையவர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தக்கூடும். அது நடைமுறையில் உள்ள அரசாங்கத்திற்கு சிக்கல் மிக்கதாகவும் அமையும். எனினும் யதார்த்தத்தில் நாடு நல்லிணக்கத்தினை நேக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதாயின் நல்லிணக்கத்திற்கான அர்ப்பணிப்பும் விட்டுக்கொடுப்பும் அவசியமாகும் என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டியுள்ளது. அல்லது உணர்த்தப்படவேண்டும். இதனை விடுத்து நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது.
பௌத்தத்திற்கு முதலிடம் என்ற கொள்கையினை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்று தமிழ்த் தரப்புக்கள் கோரிவருகின்றன. நாட்டில் சகலருக்கும் சம உரிமை என்று கூறும் அரசியலமைப்பில் ஒரு மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அரசியலமைப்புக்கு முரணானது. நல்லிணக்கத்திற்குப் பாதிப்பாக அமையும் என்பதை பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புக்குழுவில் அங்கத்துவம் வகிப்பவருமான எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். மதச்சார்பற்ற அரசாகவே நாடு இருக்க வேண்டும். என தமிழ்த் தரப்புக்கள் விரும்புகின்றன.
தமிழர்கள் தமது மதத்தினை முன்னுரிமைப்படுத்தக்கோரவில்லை. ஆனால் வேறு ஒரு மதம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதையும் விரும்பவில்லை. பௌத்தம் முன்னுரிமைப்படுத்தப்படுவது என்பது இலங்கையினை பௌத்த நாடாக மாற்றும் நகர்வுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றது என்பதனை தமிழ் மக்கள் கண்டுவந்திருக்கின்றனர். எனவே எதிர்வரும் காலங்களில் அரசியலமைப்புக் குழுவில் தர்க்கத்திற்கு உரிய விடயமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சிங்கள மக்கள் அரசியலமைப்பில் மதரீதியில் கொள்கையினை நீக்கி மதச்சார்பற்ற நிலைக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள மட்டார்கள் என்ற போக்கு நிலவுகின்றதாயின் நல்லிணக்கத்திற்கான சிங்கள மக்களின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுகின்றது. நல்லிணக்கத்திற்கான தேவைப்பாடுகளை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சமமாக அணுகவும் அர்ப்பணிக்கவும் வேண்டியுள்ளது.
நல்லிணக்கம் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அவசியமானதல்ல. சகல இனங்களுக்கும் நலன்களைத் தரக்கூடியதாகும். இந் நிலையில் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமையினால் நல்லிணக்கத்திற்குப் பங்கமுள்ளது என நியாயபூர்வமாகத் தெரிவிக்கையில் அவ்வாறு மேற்கொள்வதனால் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. ஆகவே இவ்விடயத்தில் தமிழ் மக்கள் பொறுமை காத்துப் பயணிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதினால் அது எல்லாவற்றினையும் தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும் என்பதாக அமைந்துவிடும். அது நல்லிணக்கமல்ல. எனவே சகல இனங்களையும் பாதிக்காத மதச்சார்பற்ற ஓர் முற்போக்கான நிலைமையினை நாடிச் செல்வதுதான் காத்திரமான நல்லிணக்கத்திற்கு மிக அவசியமாகும்.