யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி சுதந்திரமாக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அனைத்து மாணவர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த உபவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரத்தினம், பல்கலைக்கழகத்தில் மீண்டும் எந்த வகையிலும் அண்மையில் இடம்பெற்றது போன்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பு அரசாங்கத்தை சாரும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதுதொடர்பாக கூடிய கரிசனையுடன் செயற்படுமாறு பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்புக்காக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.