வரலாறு காணாத கனமழையால் அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர் ஜெயா, புதிய தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக ஜெயா குழும சேனல்களின் ஒளிபரப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. வேந்தர் டிவி அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வழக்கமான ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்க்ரோலிங் போகிறது. அதேநேரத்தில் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. முன்னர் புதிய தலைமுறை சேனலின் நேரலை நிறுத்தப்பட்டு ஆவணப்படம் ஒளிபரப்பானது அதுவும் சற்று நேரத்தில் நிறுத்தப்பட்டது.
இதேவேளை இந்து நாளிதழ் தனது பதிப்பையே முதல் முறையாக நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால், சென்னை நகர் சின்னாபின்னமாகிவிட்டது. ஹாலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளதாலும், இன்னும் பல லட்சம் மக்கள் கரையோரங்களில் உள்ள வீடுகளில் சிக்கி மீட்கும்படி எழுப்பும் கூக்குரலும் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. சென்னையில் கடந்த 3 நாட்களாக விடாமல் கொட்டிய மழையால் ஏற்கனவே பெய்த கன மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய ஏரிகள் தனது முழு அளவையும் எட்டியிருந்தது. ஏரிகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளின் ஓரமாக வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் செய்யத் தொடங்கியுள்ளன.