உலகில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு நிலவுவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தத் தருணத்தின் தேவை என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் அடுத்த ஆண்டு அனைவரும் ஜி20 மாநாட்டிற்காக கூடும்போது உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்த முடியும் என தாம் நம்புவதாக மாநாட்டில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்தான் தீர்வு என்றும் இரண்டாம் உலகப்போர் கால தலைவர்கள் போல் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
“அந்த பொறுப்பு நம் தோள்களில்தான் உள்ளது. இந்த உலகம் முழுவதும் இணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
“கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் பேரழிவுகளை ஏற்படுத்தியது. அப்போதைய உலகத் தலைவர்கள் அமைதி திரும்ப முயற்சிகளை முன்னெடுத்தனர். இப்போது இது நமது நேரம். நமக்கான வாய்ப்பு,” என்றார் பிரதமர் மோடி.
சுத்தமான எரிசக்தி, சுத்தமான சுற்றுச்சூழல் தேவை என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியம் என்றார். ஏனெனில் இந்தியா இப்போது வேகமாக வளரும் பொருளியலைக் கொண்டுள்ளது என பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
“எனவே, இந்தியாவுக்கு எரிசக்தி கிடைப்பதைத் தடுக்கும், அதற்கான நிலைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித தடைகளையும் ஊக்குவிக்கக் கூடாது,” என்றார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை தேடிச்சென்று கைகுலுக்கிய அதிபர் பைடன் இந்தோனீசியாவில் நேற்று நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் மோடியை நோக்கிச் சென்று கைகுலுக்கினார்.
அமெரிக்க அதிபர் தம்மை நோக்கி வருவதை முதலில் கவனிக்காத இந்தியப் பிரதமர், பிறகு சுதாரித்துக்கொண்டு அதிபர் பைடனுடன் கைகுலுக்கி, அவரை அரவணைத்தார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. முன்னதாக மாநாட்டு அரங்கில் தலைவர்களுக்கு வரிசையாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
தனக்கான இருக்கையில் அமரச் சென்ற அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமரைக் கண்டதும் தாமே முன்சென்று கைகுலுக்கினார். பின்னர் பிரதமர் மோடி ஏதோ சொல்ல, அதைக் கேட்டுச் சிரித்த அதிபர் பைடன், பிறகு தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.