சற்று முன்
Home / நேர்காணல்கள் / வயிற்றுப் பசியெடுத்தால் சிங்களவர்கள் நல்லவர்களாக மாறமாட்டார்கள் – சுகாஷ் நேர்காணல்

வயிற்றுப் பசியெடுத்தால் சிங்களவர்கள் நல்லவர்களாக மாறமாட்டார்கள் – சுகாஷ் நேர்காணல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமாகிய கனகரட்ணம் சுகாஷ் வழங்கிய நேர்காணல் 

தங்கள் சுவிஸ் பயணம் குறித்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தங்கள் வீட்டுக்கு சென்று விடுத்த அச்சுறுத்தல் தொடர்பிலும் கூறுங்கள் ?
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தமர்வு ஒன்றில் பங்கேற்பதற்காக ஏனைய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளான  கொசோவா சிம்பாவே சிரியா மற்றும் ஜோர்ஜியா நாட்டு பிரதிநிதிகளுடன் சுவிட்சர்லாந்தில் நான் தங்கி இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னுடைய வட்டுக்கோட்டையில் அமைந்திருக்கின்ற பெற்றோருடைய வீட்டுக்கு சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் என்னை விசாரிக்க வேண்டும் என்றும் நான் எங்கே சென்று உள்ளேன் என்றும் யார் என்னை அழைத்ததாகவும் அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இது எமக்கு வழமையான ஒன்றுதான். இம்முறை மாத்திரமல்ல நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடருக்காக வருகை தருகின்ற ஒவ்வொரு வேளையிலும் சரி சர்வதேச மாநாடுகள் செல்கின்ற  வேளையிலும் இத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படுவது வழமையானவை.  எனக்கு மாத்திரமல்ல இவ்வாறான  வெளிநாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி கின்ற அனைவருக்கும் கடந்த காலத்தில் அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன இம்முறை எனக்கு மாத்திரம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய இப்படியான நோக்கம் என்னவென்றால் நோக்கம் என்னவென்றால் நாங்கள் சர்வதேச மட்டத்தில் பங்குபெற்ற கலந்துரையாடலின் பொழுது எங்களுடைய வீடுகளுக்குச் சென்று அழுத்தங்களை கொடுத்தால் எங்களுடைய குரல்களை கட்டுப்படுத்தலாம் அல்லது மட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்  அவர்களுடைய எண்ணம் தவறானது இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களுடைய அச்சுறுத்தல்களையும் சேர்த்து நாங்கள் இங்கு பதிவு செய்கிறோம் இதனால் இவர்களுடைய இலங்கை நாட்டிற்கு தான் ஒரு அவப்பெயர் ஏற்படும் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.நீதி கிடைக்காமலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அம்மாக்கள் தொடர்ச்சியாக இறந்து போகின்ற நிலை குறித்து கூறுங்கள் ?இது ஒரு அவலம் இது தற்செயலாக நடைபெறும் நிகழ்வாக நான் பார்க்கவில்லை திட்டமிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கான  எந்தவிதமான சர்வதேச பொறி முறைகளையும் உருவாக்காது  தொடர்ச்சியாக உள்ளகப் பொறிமுறை தீர்வுகளை வழங்குகின்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மக்களையும் ஏமாற்றி சர்வதேசத்தையும் ஏமாற்றி இலங்கை அரசின் உடைய காலம் கடத்துகின்றனர் கிடைக்கின்ற வெற்றியாகத்தான் இதனை நாங்கள் பார்க்கவேண்டும். இது மிகவும் அவலமான விடயம் மட்டுமல்ல வேதனையான விடயம். எந்த வகையிலும் இவற்றினை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது.   இற்றைவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய நூற்றிற்கும் அதிகமான  உறவுகள் மரணித்து இருக்கிறார்கள்  அவர்களில் பலர் விசாரணைகளுக்கு முக்கியமான சாட்சிகளாக இருக்கின்றவர்கள்.  தங்களுடைய பிள்ளைகளை ஆயுதப் படைகளும் துணை இராணுவ குழுக்களும்  கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கியதை  வாகனங்களுக்குள் இழுத்து ஏற்றிச் சென்றதை  வீடு புகுந்து அடித்து உதைத்து இழுத்துச் சென்றதை கண்ணால் கண்டவர்கள்.  சிலர் தங்கள் உறவுகளை பிள்ளைகளை கணவனை,  தாம்பிமாரை, சகோதரிகளை ராணுவத்திடம் நேரடியாக கைளித்தவர்கள்.  இப்படியான ஒரு சட்டப் பொறிமுறையினுடைய முக்கியமான சாட்சிகள் மரணிப்பதை ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படை  என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது. ஒவ்வொரு உறவும் இறக்கின்ற பொழுதும் ஒவ்வொரு வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகின்ற சூழ்நிலையை ஒரு சட்டத்தரணியாக என்னால் அனுமானித்துக்கொள்ள முடிகின்றது.  இது திட்டமிட்ட ஒரு செயற்பாடு. எனவே சர்வதேச சமூகம் விரைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை  உருவாக்குவது மாத்திரமே தீர்வாக இருக்க முடியுமே தவிர வேறு எத்தகைய உள்ளக பொறிமுறைகைளும்  ஒரு போதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வாக முடியாது. இதற்கு தமிழ் தேசியம் பேசுவதாக செல்லுகின்ற  சகல தரப்புகளும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலில் சர்வதேச விசாரணையை கூறுவது மாத்திரம்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும்  ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைக்குமான ஒரே ஒரு தீர்வாக அமையும்.

நாட்டை மீட்பேன் என பிரதமர் பதவி எடுத்த ரணில் விக்கிரமசிங்க ஒருநாளைக்கு இருவேளை உணவுகூட கிடைக்காத நிலை வரலாம் என கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள் ?
ரணில் விக்கிரமசிங்க இம்முறை  பிரதமராக பதவியேற்ற பொழுது  கடந்த  காலங்களில் தனக்கு ஆதரவளித்த நாடுகள் இம்முறையும்  தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பி இருக்கிறார்.  ஆனால் இம்முறை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்த நாடுகளின் உடைய பிரதிநிதியாக அவர்களுடைய பின்னணியோடு பதவிக்கு வராது ராஜபக்ச குடும்பத்தின் கால்களில் விழுந்து அடிமையாக பதவிக்காக விலை போய் பதவியேற்றமையினால் அவருக்கு கடந்த காலத்தில் ஆதரவளித்த நாடுகள் கூட இம்முறை ஆதரவளிக்க முன் வரவில்லை. ஏனென்றால் அந்த நாடுகளை பொறுத்தவரையில் யார் பதவி ஏற்கின்றார் என்பது முக்கியமல்ல அவர்கள் எவ்வாறு பதவி ஏற்கிறார்கள் அதாவது தன்னுடைய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு தங்களால் பதவிக்கு கொண்டுவரப்படுகின்றார்களா  அல்லது வேறு வழிகளில் பதவிக்கு வருகிறார்களா என்பதை பொறுத்து அந்த நாடுகள் உதவிகளை வழங்கும்.  அந்த வகையில் அந்த நாடுகளின் உடைய ஆதரவோடு மறைமுகமாக சொல்லப்போனால் அவர்களுடைய கூலியாக ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முறை பதவி ஏற்காத காரணத்தினால் அந்த நாடுகள் ரணிலுக்கு மாத்திரமல்ல எதிர்காலத்தில் தங்களினுடைய ஆதரவில்லாது, தங்களுக்கு அறிவிக்காது பதவிகளுக்கு வந்தால் தங்களிடமிருந்து எந்தவிதமான உதவியும் கிடைக்காது என்ற செய்தியை ரணிலுக்கு மாத்திரமல்ல ரணில் ஊடாக அனைவருக்குமே தெரியப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் பூகோள அரசியலினுடைய ஒரு வெளிப்பாடாகத்தான் பார்க்கப்படவேண்டும்.

இத்தனை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை அரசு தமிழர் தாயகப் பிரதேசங்களில் பௌத்த மயமாக்கலையும் காணி அபகரிப்பையும் தீவிரப்படுத்திவருகிறதே ?
சிங்கள பௌத்த பேரினவாத அரசினுடைய நிகழ்ச்சி நிரல் ஒருபோதுமே மாறாது என்பதை மீண்டும் ஒரு முறை பட்டவர்த்தனமாக வெளிபடுத்தி இருக்கின்றது.  சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரல் மிகத் தெளிவானது.  இதனை கடந்த காலம் தொட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது.  மகாவம்ச தீபவம்ச  மனநிலையிலிருந்து  சிங்கள பௌத்த பேரினவாதம் மாறாது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  சிங்கள பௌபவுத்த பேரினவாத  அரசுகளைப் பொறுத்தவரையில்  அவர்களுக்கு எத்துணை அளவிற்கு இடர்களோ பிரச்சனைகளோ வந்தாலும் தங்களுடைய நிகழ்ச்சிநிரலில் இருந்தும் இம்மியளவும் விலகமாட்டார்கள் அல்லது மாறமாட்டார்கள் என்பது வெளிப்பட்டு நிற்கின்றது.  இதனால்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது அது என்னவென்றால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யத்தக்க வகையில் வழங்க முன்வராத எந்த ஒரு அரசாங்கத்திற்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஆதரவளிக்க முடியாது என்ற விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதற்கு இதுதான் காரணம்.  ஆகவே ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை வாயிலாக  ஒரு தீர்வினை வென்றெடுத்தால் மாத்திரம் தான்  சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய  தொடர்ச்சியான தன்மையான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமே தவிர அவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்லது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியால் தமிழர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இனப்படுகொலை என்னுடைய பாதிப்புகள் குறையும் அல்லது இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக சிங்களவர்கள் நல்லவர்களாக மாறி விடுவார்கள் என்றெல்லாம் நாங்கள் நினைத்தால் அது எங்களுடைய அறியாமையாகவே இருக்க முடியும்.

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே ?
சரத் வீரசேகர அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியினால் அல்லது அவருடைய வயது முதிர்ச்சியின் அறளை பேர்ந்துவிட்தோ தெரியவில்லை பேச்சு வழக்கிலேயே அறளைபேர்ந்துவிட்டது என்று சொல்வார்கள். அதாவது  வயோதிபத்தின் வெளிப்பாடாக  தங்களுடைய மூளையின் உடைய கட்டுப்பாட்டிற்கு அப்பால் ஏற்படுவதைத் தான் அவ்வாறு பேச்சு வழக்கிலே  அறளை பெயர்ந்து விட்டது என்று கூறுவார்கள்.  உண்மையில் இது சரத் வீரசேகரவையும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உடைய முகவர்களையும் பார்த்து தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களும் கூற வேண்டிய ஒரு வாசகத்தை  சரத் வீரசேகர அவர்கள் கூறியிருக்கிறார்.  அவர் எதற்காக இத்தகைய வாசகத்தை சொன்னாரோ எங்களுக்கு தெரியவில்லை. உண்மையில் தமிழ் மக்களினுடைய தாயக பிரதேசங்கள் மீது  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உடைய அடையாளங்களை  வலிந்து திணிக்கின்ற  சிங்கள  பௌத்த பேரினவாதத்திற்கும் அவர்களுடைய முகவர்களுக்கு எதிராகவே  தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களும் இந்த வாசகத்தை சொல்லவேண்டுமே தவிர  சரத் வீரசேகர இவ்வாறு எச்சரிக்கை விடுப்பது என்பது  அவர் ஒரு குழப்பவாதியாக உண்மையான விடயத்தை மறைத்து  முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்று ஏற்படுகின்ற ஒருவராகத் தான் நாங்கள் இவரைப் பார்க்க வேண்டும். உண்மையில் சரத் வீரசேகர எந்த அளவிற்கு அறிவு பூர்வமற்ற வகையில் சிந்திக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் அதனால்தான் கடந்த  அமைச்சரவை அமைச்சர் அவருக்கு வழங்க அமைச்சுப்பதவி கூட இம்முறை வழங்கப்பட்டிருக்கவில்லை என்கின்ற நியாயமான கேள்விகூட இந்தச் சந்தர்ப்பத்தில் எழுந்துநிற்கின்றது. 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com