யாழ் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர்ஒருவர் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக பொதுமக்களினால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செலயத்தில் இன்று (19) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரத்தில் பிரதேச செயலர் அங்கு இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றபோதிலும் குறித்த நபர் பணியாற்றிய திட்டமிடல் பிரிவு மற்றும் குறித்த பெண் உத்தியோகத்தர் பணியாற்றிய நிர்வாகப் பிரிவின் அதிகாரிகள் அங்கிருந்தும் அவர்களும் இணைந்து வேடிக்கை பார்த்ததாக பொதுமக்கள் சிலரால் வாகீசத்துக்கு முறையிடப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் யார் மீது பிழை உள்ளது என்பதற்கு அப்பால் பொதுவெளியில் பொதுமக்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஒரு பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீக முறையில் வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டு குறித்த உத்தியோகத்தர் நடந்துகொண்ட விதம் முகம் சுழிக்கவைத்ததாக தெரிவித்த அவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர் நடவடிக்கை எடுக்காதுவிடின் குறித்த பிரதேச செயலகம் எது அதிகாரிகள் யார் என்ற விபரங்களை தாம் பகிரங்கப்படுத்தப்போவதாகவும் எமக்குத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து குறித்த பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களை வாகீசம் தெடர்புகொண்டு வினவியபோது சம்பவத்தை உறுதிப்படுத்திய அவர்கள் சம்பவம் தொடர்பில் நாளை பிரதேச செயலரிடம் ஒழுக்காற்று விசாரணை கோரி தாம் விடயத்தைப் பாரப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர் முன்னரும் இவ்வாறு ஒரு பெண் உத்தியோகத்தரிடம் அநாகரீகமான நடந்துகொண்டபோது முன்னைய பிரதேச செயலரினால் அவ் உத்தியோகத்தர் எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் குறித்த பெண் உத்தியோகத்தர் வேறு பிரதேச செயலகம் ஒன்றிற்கு மாற்றல் பெற்றுச் சென்றுவிட்டாதாகவும் அங்கு நீண்டகாலமாகப் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.