வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவினை நிறுத்த வேண்டும் என சின்னத்துரை சுந்தரலிங்கம் பாலேந்திரா சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலமைச்சர் உச்ச நீதிமன்றில் ஓர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த என்னை சட்ட விதிமுறைக்கு முரணாக முதலமைச்சர் நீக்கியமை செல்லாது எனவும் தொடர்ந்தும் தானே அமைச்சர் என உத்தரவிடக்கோரி வடக்கு மாகாண அமைச்சர்களில் ஒருவலான பா.டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கிற்கு இடைக்கால உத்தரவு வழங்கிய நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சர் என உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சர் என கடந்த 2018-06-28 அன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவினை இடைநிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் தரப்பில் தற்போது உச்ச நீதிமன்றில் ஓர் றிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் டெனீஸ்வரனின் வழக்கு மீண்டும் நாளைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவற்றின் காரணமாக நாளைய நீதிமன்ற நடவடிக்கைகள் பெருதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அதேநேரம் உச்ச நீதிமன்றில் முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.