இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதார அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்கள் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள் என்றால், வடக்கு – கிழக்கில் முதலீடுகளை செய்ய அவர்கள் முன்வரவேண்டும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் கீழுள்ள இலங்கை சுற்றுலா கற்கை நிறுவகத்தின் கீழ் விருந்தோம்பல் முகாமைத்துவ பயிற்சி நெறிகள் கடந்த ஒரு மாத காலமாக யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றன.
மூன்று பிரிவுகளாக இடம்பெற்ற இந்த விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கை நெறியில் 120 மாணவர்கள் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாறு பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை சுற்றுலா கற்கை மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் புத்திக்க கேவவாம் தலைமையில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இன்று(2) இடம்பெற்றது.
இதில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
வடக்கிலுள்ள சுற்றுலா மையங்களை தொன்மை மாறாத வகையில் சீரமைப்பதற்கு தம்முடன் ஒத்துழைப்பை வழங்குமாறு வடமாகாண முதலமைச்சரால் இன்று விடுக்கப்ப்பட்ட வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்ட அமைச்சர், அதற்கான சகல நிதி மற்றும் பௌதீக உதவிகளை தாம் மேற்கொள்வதாகவும் வாக்குறுதி வழங்கினார்.
சுற்றுலா கற்கை மைய தலைவர் சுனில் திஸ்ஸநாயக்க யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ விரிவுரையாளர் வேல்நம்பி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.