எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரமாக கூடவுள்ளது.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஆர்னோல்ட்டை கல்வி அமைச்சராக நியமிக்கக்கோரி கட்சிச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் கையொப்பமிட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அக் கடிதத்திற்கு எவ்விதமான பொறுப்பான பதிலையும் வடமாகாண முதலமைச்சர் அறிவிக்கவில்லை. தான் விரும்பிய ஒருவரை அமைச்சராக்கினார். இதனால் உறுப்பினர்களிடையே அதிருப்திகள் அதிகமாக எழுந்துள்ள நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் மோசடிகள் குறித்து மாகாண தெரிவுக்குழவொன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முன்மொழியப்பட்டு அவைத்தலைவரின் அனுமதியைக் கோரப்பட்டுள்ள பிரேரணை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் முதலைமைச்சின் தன்னிச்சையான செயற்பாடுகள் குறித்தும் ஆழமான கவனம் செலுத்தப்பட்டு முதலமைச்சர் தொடர்பில் முடிவொன்றை எட்டுவதற்கும் தலைப்படலாம் எனவும் அக்கட்சியின் உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன