இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வாவை நியமிப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இலங்கையின் இறையாண்மையின் அடிப்படையில் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட முடிவு. இலங்கையின் பொது சேவைகள், உள்நிர்வாகத்தில் வெளிப்பற சக்திகளின் தலையீடு தேவையற்றது, எற்றுக்கொள்ள முடியாதது“
இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிரடியாக அறிவித்தது இலங்கை.
ஐ.நா மனத உரிமைகள் பேரவையின் 42வது அமர்வு ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. இலங்கை தொடர்பான பிரேரணைக்கு மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிய நாடுகள் நேற்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தன. அதில் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்த விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கவலைகளில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் உரையாற்றிய, ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ், சவேந்திர சில்வா விவகாரத்தில் வெளிநாட்டு அபிப்பிராயங்களை நிராகரித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக சில நாடுகள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து இலங்கையின் ஏமாற்றத்தையும் அவர் குறிப்பிட்டார்.
“இராணுவத் தளபதியின் அண்மைய நியமனம், ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட ஒரு இறையாண்மை முடிவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் பொது சேவை முன்னேற்றம், மற்றும் உள் நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வெளிப்புற முயற்சிகள் தேவையற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சில இருதரப்பு பங்காளிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் இந்த நியமனம் குறித்து அக்கறையுள்ள ஒரு நிலையை குறிப்பிடுவது வருந்தத்தக்கது மற்றும் இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானது“ என்று அவர் கூறினார்.