தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அலுவலகத்தினுள் சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே தமிழர் தாகயத்தின் மாவட்டங்கள்தோறும் பொலிசார் நீதிமன்றங்கள் ஊடாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை உத்தரவினை பெற்றிருந்தனர். அவ்வாறு முல்லைத்திவு மாவட்டத்தில் பெறப்பட்ட தடை உத்தரவில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனின் பெயரிலும் தடைஉத்தரவு பெறப்பட்டு அவரது மகனிடம் உத்தரவைக் கையளிக்க பொலிசார் சென்றுள்ளனர்.
அதன்போது தடை உத்தரவை அப்பாவின் கல்லறையில் ஒட்டிச்செல்லுங்கள் என அவர் பொலிசாரிற்கு முகத்தில் அறைந்தாற்போல் தெரிவித்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மெய்நிகர் ஊடக அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.