யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கட்டாயமான கலந்து கொள்ள வேண்டுமென யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மையில் பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டவர்களிற்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
9.45 மணி நிகழ்விற்கு, காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டுமென்றும், நிகழ்விற்கு வருபவர்களின் வரவு குறிக்கப்படுமென்றும் கறார் தொனியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கில் நடைபெறும் நிகழ்வுகளிற்கு இதேவிதமாக ஆட்கள் சேர்க்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்தது. எனினும், தற்போது ஐ.தே.க மற்றும் தமிழ் அரசு கட்சியின் கூட்டில் நடைபெறும் யாழ் மாநகரசபை திறப்பு விழாவிலும் அதேநிலைமைதான் நீடிக்கிறது.
இன்றைய நிகழ்வில் 2,200 பேர் கலந்துகொள்வார்கள் என குறிப்பிட்டு, அதற்கான பந்தல், உணவு உள்ளிட்ட உபசரணை செலவாக 2.7 மில்லியன் ரூபா மக்கள் பணத்தை, யாழ் மாநகரசபை வாரியிறைக்கு தீர்மானித்தது. யாழ் முதல்வரின் இந்த தீர்மானத்திற்கு மாநகரசபை எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன.
எனினும், நிகழ்விற்கு 2,200 பேர் விரட்டிப் பிடித்தே கொண்டு வரப்படுகிறார்கள். பட்டதாரிகள் நியமனம் வழங்கப்பட்ட அனைவரும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தரப்பிலிருந்தே கட்டளையிடப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் நோக்கத்துடனேயே இரண்டு கட்சிகளாலும் பொதுமக்கள் பெருமளவில் இந்த நிகழ்விற்கு ஏற்றி வரப்படுகிறார்கள். கட்சிகளின் அரசியல் நடவடிக்கையால், யாழ் மாநகரசபை மக்களின் வரிப்பணமே விரயமாக்கப்படுகிறது.
அரச வேலைவாய்ப்பை தேர்தலிற்காகவும், தனிப்பட்ட அரசியலுக்காகவும் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகத்துடன், இலஞ்சமும் ஆகும்.