யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சுதர்சிங் விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனைக்கு எதிராக மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுவதற்கான அறிவித்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தண்டனைக் கைதியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்திருக்க உத்தரவிடக்
கோரிய மனு மீதான கட்டளையை வரும் 20ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்று புதன்கிழமை ஒத்திவைத்தார்.
2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் நால்வர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 3 குற்றவாளிகளுகான தண்டனைத் தீர்ப்பை கடந்த 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார். எனினும் ஒரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் அவரது சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான அறிவித்தல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டது.
தண்டனைக் கைதி சார்பில் மேன்முறையீடு செய்யப்படுவதால் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு விஜயகாந்த் சார்பில் அவரது சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யதார். அந்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரண் நிராகரித்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் சார்பில் மீளவும் ஒரு விண்ணப்பம் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தடை உத்தரவிடுமாறு அவரது சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
விண்ணப்பம் மீதான கட்டளையை இந்த மன்றின் நிரந்தர நீதிவான் வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்குவார் என மேலதிக நீதிவான் அறிவித்தார். இதேவேளை, கடூழிய சிறைத் தண்டனைக் கைதி ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து தென்னிலங்கை சிறைச்சாலைக்கு மாற்றப்படுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.