யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்து பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவத்தில் புளொட் அமைப்பின் மூத்த முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டு, . அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர். யுத்த காலத்தில் குறித்த வீடு புளொட் அமைப்பின் காரியாலயமாக இருந்துள்ளது. யுத்தம் முடிவுற்ற நிலையில் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மட்டும் அந்த வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து வந்து வீட்டை கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவிக்க, வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். பொலிஸார் சென்று, அங்குள்ள பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2 396 ரவைகள், கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன், வீட்டை தோண்டி முழுமையான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியுடனான ஆசனப் பங்கீட்டில் ஏற்பாட்ட அதிருப்தி காரணமாக புளொட் அமைப்பு நேற்று இரவு நடைபெற்ற பங்காளிகள் கூட்டம் ஒன்றிலிருந்து வெளிநடப்புச் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.