மக்களின் காணிகளைப் பிடிப்பதையும் பௌத்த தூபிகள் சிலைகள் அமைப்பதையும் தவிர நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிற்கு என்ன செய்தது? எனக் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பூரில் 1000 ஹெக்ரயர் காணியினை விடுவித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,
நல்லாட்சி அரசு வலிவடக்கில் மக்களிடம் கையளித்த காணிகள் கூட முன்னைய மகிந்த அரசு மக்களிடம் கையளிப்பதாக இருநந்த நிலங்களைத்தான் கையளித்துள்ளது. விடுவிக்கப்பட்டநிலப்பத்திரங்களில்கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கைஒப்பமே உள்ளது. இந்த அரசும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வினையும் பெற்றுத்தப்போவதில்லை என எல்லோரும் ஏற்றுக்கொண்டுள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மட்டும் இந்த அரசு 2016 இற்குள் தீர்வைப் பெற்றுத்தரும் என எந்த அடிப்படையில் நம்புகிறாரோ தெரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு அறிக்கை விடுத்தோம் கடந்த பெப்ரவரிக்குப்பின் எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பந்தன் அவர்கள் என்ன மனநிலையில் செயற்படுகின்றார் என்று தெரியவில்லை.
மிக மோசமான இடப்பெயர்வுகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கியவர்கள் வடபகுதி மக்கள் அந்த வகையில், இடப்பெயர்வுகளின் வலிகளை பற்றி எமக்கு நன்றாக தெரியும்.
கொஸ்கம – சலாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன்போது எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பொழுது அந்தப் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இராணுவ முகாம் அமைக்க வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்கும் போது, வட மாகாணத்தில் பொது மக்களின் மத்தியில் எத்தனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராணுவ முகாம்களில் வெடி பொருட்கள் இருக்குமென்பது தவிர்க்க முடியாதவை. பாரிய வெடி பொருட்கள் களஞ்சியப்படுத்தும் பகுதி இல்லா விட்டாலும், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் என்பன இருக்கின்றன.
இந்த முகாம்களுக்குள் ஏதாவது வெடி சம்பவங்கள் நடைபெற்றால், எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள்.
வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கூறிய போது, தினேஸ் குணவர்த்தன மற்றும் அரசாங்கம் முழுமையாக எதிர்க்கின்றனர்.
இந்த சம்பவத்தின் (சலாவ) பின்னரேனும், மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் இருக்க கூடாது என அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதுடன், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அவை மாற்றப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்களின் தலைமைத்துவங்களும் இந்த விடயத்தினை வலியுறுத்த வேண்டும்.
ஒரு இராணுவ முகாமினால் இவ்வாறான பாரிய பிரச்சினைகளை உருவாக்க முடியுமென்றால், வடபகுதியில் நூற்றுக்கணக்கான முகாம்கள் இருக்கின்றன. அந்த முகாம்களினால், எவ்வளவு பெரிய அனர்த்தம் ஏற்படக் கூடும்.
எனவே, தினேஸ் குணவர்த்தன போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத் தான் தமிழ் மக்களுக்கும் ஏற்படுமென்பதனை உணர்ந்து, வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்துகின்றோம் என்றார்.