வட மாகாணசபையில் குழப்பம் ஏற்பட்டமைக்கு அமைச்சுப் பதவிகளே காரணம் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து அமைச்சுக்களை வைத்துக் கொண்டு, ஐந்து மாவட்டங்களுக்கு நான்கு கட்சிகளுக்காக அவற்றைப் பிரித்துத் தருமாறு கோரியதையடுத்தே குழப்பம் ஏற்பட்டது. தம்முடைய மாவட்டத்துக்கு தரவில்லை என்ற சண்டை அன்றே ஆரம்பித்து விட்டது. இதுதான் அடிப்படையாகும். மாகாணசபை குழம்பியமைக்கு பதவிகளே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாணத்தில் சுமூகமான உள்ளுராட்சி நிர்வாகத்தினை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை மறுதினம் உள்ளுராட்சி சபை நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். உள்ளுராட்சி நிர்வாகத்தினை உள்ளுர் விடயம் என்பதினால் அதற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு, சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினர்களும் செயற்படுவதே இன்றைய தேவையாக இருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி நிர்வாகத்தினை சுமூகமான நிலையில் கொண்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
புரிந்துணர்வுகள் இடம்பெற வேண்டும். ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தில் சிறந்த நிர்வாகமாக திகழ வேண்டும்.
அந்தந்தகட்சிகள் தமது தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகவும், சுமூகமானசூழுலை உருவாக்க வேண்டும். முரண்பட்டுக்கொண்டு உள்ளுராட்சி சபைகளை நிர்வகிக்க முடியாதது. தனிப்பெரும்பான்மை பெற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும், முழுமையான ஆதரவினை ஏனையோரும் வழங்கியும், கலந்துபேசியும், சிக்கலில்லாத நிர்வாகத்தினை வடமாகாணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.