யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்குப் பயன்படுத்திய பனர்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய்ப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இரவு ஆகும்வரை மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த பொலிஸார்இன்று இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.
இதன்போதே மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்.