இலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் இராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் நேற்று (08) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாண கோட்டையின் தெற்கு வாசல் பக்கமாக நேற்று மாலை தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி கே. சுகாஸ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொல்பொருள் திணைக்களமே இராணுவ நிகழ்ச்சி நிரலுக்காக செயல்படாதே, வரலாற்று சின்னங்களை இராணுவ மயமாக்காதே, இராணுவமே வெளியேறு, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.