தாய்லாந்து மன்னராக பூமிபால் அதுல்யதேஜ் உள்ளார். இங்கு மன்னர்தான் தெய்வம். மன்னரையோ, மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையோ எந்த ரூபத்தில் யார் விமர்சித்தாலும் கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
இந்நிலையில் தன்கோர்ன் சிரிபாய்பூன் (வயது 27) என்ற தொழிலாளி, மன்னரின் வளர்ப்பு நாய் குறித்த சமூக வலைத்தளங்களில் விமர்சித்து விட்டாராம். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மன்னரின் செல்ல நாயை கிண்டலடித்து 3 போட்டோக்களை ஃபேஸ்புக் தளத்தில் ஏற்றியுள்ளார்.இதையடுத்து அவர் பாங்காங்கில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
உடனடியாக அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதோடு தேசத்துரோக குற்றமும் சுமத்தப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால், சிரிபாய்பூனுக்கு 37 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
மன்னர் பூமிபாலின் செல்ல நாய் டாங்யோங் அல்லது காப்பர் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் அவர் இதனை வளர்த்து வருகிறார். தாய்லாந்தில் இதற்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு தனது செல்ல நாய் குறித்து’ தி ஸ்டோரி ஆஃப் டாங் தயோங்’ என்ற பெயரில் மன்னர் பூமிபாலே புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம் 2002ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனையாகி சாதனை படைத்தது.