தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் உதவி கோரவில்லையென யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஏ.நடராஜனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்கு உதவுவது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடக்கு முதல்வர் தம்மிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுவரை அயல்நாடுகளிடம் உதவி கோரவில்லையென்றும், எனினும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தாராளமாக உதவாலாமென்றும் தான் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்களுக்கு உதவ வேண்டுமென்ற வட மாகாண சபையின் ஆர்வம், உணர்வு ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டதாக தெரிவித்த அவர், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.