இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியான திலீபனின் 29 ஆவது அண்டு நினைவு நாளினை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிமுகச் சிலந்திகள் என அறியப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் அமைப்பினருடன் இணைந்து மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நல்லூர் வீதியில் உள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தியும், ஈகைச்சுடர் ஏற்றியும் மலரஞ்சலி செலுத்தியும், அனுஷ்டித்துள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வின் எழுச்சியை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு எழுக தமிழ் நிகழ்வானது அரசுடனான தங்கள் நல்லிணக்க முயற்சிகளைக் குழம்பும் செயல் என கடுமையாகப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்த தமிழரசுக் கட்சியினர் வீழந்துபோன தங்கள் செல்வாக்கினை உயர்த்துவதற்காக அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடனேயே இந்த நினைவேந்தல் நாடகம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
ரணில் அரசிடம் முன் அனுமதி பெற்ற தமிழரசுக்கட்சி தேர்தல் காலங்களில் அரச புலனாய்வாளர்கள் என தாம் கடுமையாகச் சாடிவந்த ஜனநாயகப்போராளிகள் கட்சியுடன் கைகோர்த்து திலீபனை நினைவுகூர்ந்தமை அம்பலமாகியுள்ளது.
மாவை சேனாதிராசாவுடன் தொடர்பு கொண்ட ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளது கொடிகள் மற்றும் இலட்சினைகள் அற்று நினைவேந்தலை செய்யலாமென பச்சை கொடி காட்டியதாகவும் தெரியவருகின்றது. இதே தகவல் ஜனநாயகப்போராளிற்கும் அறியத்தரப்பட்டதையடுத்தே இது வரை முரண்பட்டிருந்த தமிழரசுக்கட்சி,ஜனநாயகப்போராளிகள் கலந்து பேசி முடிவு செய்து நினைவேந்தலை நடத்தியதாகவும் தெரியவருகின்றது. அவர்களது அழைப்பினையடுத்தே அனைவரும் ஒரே நேரத்தினில் வந்து சேர்ந்ததாக தெரியவருகின்றது.ஜனநாயகப்போராளிகள் தம்முடன் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரியையும் அழைத்து வந்திருந்தனர்.
அரசாங்கத்தின் பங்காளிகள் என்றவகையில் கொழும்பிற்கு சங்கடம் ஏற்பட்டுவிடக்கூடும் எனக்கருதி கடந்த 24 ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் மேற்கொள்ளப்பட்டிருந்த எழுக தமிழ் நிகழ்வினை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்திருந்ததோடு தமது கட்சி ஊடகத்தில் எழுக தமிழிற்கு எதிரான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது.