இந்தியக் கடற்பகுதியில் நேற்று நண்பகல் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இரண்டு மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சதீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐஜிசிஎஸ்77 ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் ஆந்தோணி ராஜ் என்பவரது படகில் மீன்பிடிக்கச் சென்ற பிச்சை மற்றும் ஜான்சன் என்ற மீனவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படகை சுற்றிவலைத்த இந்திய கடலேரா காவல் படையினர்கள் மீனவர்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றும் தமிழில் பேச கூடாது என கட்டாய படுத்தி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.