2015 – 2018 ஆம் ஆண்டுகளில் அரச அலுவலகங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
2015 ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் நியாயாதிக்க சபைகளில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தல், ஏமாற்றுதல்கள், அரச அதிகாரங்கள், சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் முறையற்ற பாவனை அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அந்த குழுவின் இடைக்கால அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி செயளகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டதுடன், ஏனைய உறுப்பினர்களாகிய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.