சற்று முன்
Home / செய்திகள் / சிறுத்தை கொலை வழக்கு – 10 பேருக்கும் பிணை

சிறுத்தை கொலை வழக்கு – 10 பேருக்கும் பிணை

கிளிநொச்சி, அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தையொன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 10 பேரும் இன்று (05) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படடு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த 10 பேரையும் தலா ஐயாயிரம் ரூபா காசுப் பிணையிலும் தலா இரண்டு இலட்சம் ரூபா ஆட் பிணையிலும் செல்ல நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (29) சந்தேகநபர்கள் பத்து பேரும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர் சார்பாக முன்னிலையான திருமதி எஸ். விஜயராணி, சம்பவதினத்தன்று 7.45 மணிக்கு குறித்த சிறுத்தை ஊர்மனைக்குள் வந்தது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு ஊர் மக்களாலும் கிராம மட்ட அமைப்புக்களாலும் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காது காலம் தாழ்த்தி 8.30 மணிக்குப்பின்னரே அங்கு வந்ததாக கூறினார்.

அதன் பின் சிறுத்தையை பிடிக்கமுற்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் சிறுத்தையின் தாக்கத்திற்கு உள்ளாகியபோது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விட்டு 12.30 மணிவரைக்கும் குறித்த சிறுத்தையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதில் பொலிசாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கடமையை சரியாகச் செய்யாமல் இருந்துள்ளனர்.

இதனையடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலும் ஏற்கனவே சிறுத்தை தாக்கத்திற்கு உள்ளாகிய பத்துப்பேர் வரையில் பாதிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆத்திரமடைந்த மக்கள் இவ்வாறு இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் குறித்த பத்து பேரையும் பொருத்தமான பிணையில் செல்ல நீதிமன்றம்அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து, பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இதேவேளை, வழக்குத் தொடுனர் தரப்பில் முன்னிலையான கிளிநொச்சிப் பொலிசார், குறித்த சிறுத்தை பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் இந்த சிறுத்தை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றமன்றத்திலும வாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் பொருட்டு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் பலரை கைது செய்யவேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த பத்துப்பேரையும பிணையில் செல்ல அனுமதித்தால் விசாரணைகளை முன்னெடுப்பதிலும் மேலும் சந்தேகநபர்களை கைது செய்வதிலும் பாதிப்புககள் ஏற்படலாம் என ஆட்சேபணை தெரிவித்தனர்.

இதனால் குறித்த பத்து பேரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, மீண்டும் நேற்றுமுன்தினம் (03) மீண்டும் மாவட்ட பதில் நீதவான் ம. கிறேசியன் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, குறித்த 10 பேரும் மீண்டும் இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இன்று (05) மீண்டும் குறித்த பத்துப் பேரையும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சட்டத்தரணிகளான திருமதி எஸ். விஜயராணி, அர்ச்சனா, தர்சா, சோபிகா ஆகியோர் குறித்த சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையாகி தமது பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தனர்.

இதனையடுத்து, குறித்த 10 பேருக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்தில், கடந்த ஜூன் 21 ஆம் திகதி, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிக் காயப்படுத்தியதையடுத்திய சிறுத்தையொன்று பிரதேசவாசிகளால் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com