சற்று முன்
Home / ஜோதிடம் / குருபெயர்ச்சி பலன்கள் – மீனம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

குருபெயர்ச்சி பலன்கள் – மீனம் (02.09.2017 முதல் 02.10.2018 வரை)

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். சமாதானத்தை விரும்பும் நீங்கள், இன, மொழி, பேதம் பார்க்காமல் பழகுபவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும், செல்வாக்கையும், ஓரளவு பணவரவையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தை தருவார். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும். ஆனால்,  வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பாருங்கள். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு எதிராக முடிய வாய்ப்பிருக்கிறது. திடீர் பயணங்களால் அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயர் கெடும்.

குருபகவானின் பார்வை:  

குருபகவான் தனது 5ம் பார்வையால் 12ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  குழந்தை பாக்யம் கிடைக்கும். தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். குருபகவான் தனது 7ம் பார்வையால் குரு உங்களது 2ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் 4ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள்.

குருபகவானின் சஞ்சாரம்: 

உங்கள் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசாங்க அதிகாரிகள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். தந்தைவழி சொத்தை பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவு வரும். கணவன்  மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் திணறுவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினர்களால் ஆதாயமடைவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம்.

உங்களின் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான  குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீட்டில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அயல்நாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். என்றாலும் பண விஷயத்தில் ஏமாந்துவிட வேண்டாம். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்: 

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதனால் இந்தக் காலக்கட்டத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் கணவன்  மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

வியாபாரிகளே! 
அவசர முதலீடுகள் வேண்டாம். மக்களின் ரசனையை அறிந்து செயல்படுங்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களுக்கு அதிக முன் பணம் தர வேண்டாம். அவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக நடத்துங்கள். சந்தை நிலவரத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். பங்குதாரர்களால் இருந்த கெடுபிடிகள் விலகும். இனி உதவிகரமாக இருப்பார்கள். மூலிகை, தேங்காய் மண்டி, எலக்ட்ரிக்கல், துரித உணவகங்கள், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு.

கன்னிப் பெண்களே!  சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. வேலை கிடைக்கும்.

மாணவ  மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். விளையாடும் போது காலில் அடிபடக்கூடும். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிக்க வைப்பார்கள்.

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு வேறுசிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.

அரசியல்வாதிகளே! 
உட்கட்சிப் பூசல் வெடிக்கும். எதிர்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துலைத்தெடுப்பீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். தொகுதி மக்களை மறக்காதீர்கள். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். விளைச்சலைப் பெருக்க வேண்டுமே என்று கவலைப்படுவீர்கள். பக்கத்து நிலத்துக்காரருடன் வீண் தகராறு வேண்டாமே. புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட உரங்களை பயன்படுத்த வேண்டாம். நெல், கடலை, உளுந்து, கீரை வகைகளால் ஓரளவு ஆதாயமடைவீர்கள். இந்த குரு மாற்றம் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதன் மூலம் முன்னேற வைப்பதுடன் வருங்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டு நிறைவேற வைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: 

திட்டக்குடி வசிஷ்டேஸ்வரரை தரிசித்து வாருங்கள். கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com