ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் பிரிவான இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளின் தெடர்ச்சியாகவே ஊடகவியலாளர் நடராஜா குகராஜ் மீதான தாக்குதலை நோக்குகின்றோம்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்ற டான் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் மீது பொலீஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருப்பது ஊடக சுதந்திரம் தொடர்பில் ஒரு வித கேள்வியை ஏற்படுத்துகின்றது.
செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் பொலீஸார் செயற்பட்ட பொழுது குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்ய முற்பட்ட ஊடகவியலாளர் என். குகராஜ் மீது பொலீஸ் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார். பின்னர் பொலீஸாரின் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.
ஒருபக்கம் கடந்த ஆட்சியாளர்களை வன்முறையாளர்களாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டு தம்மை ஜனநாயகவாதிகள் என வெளி உலகிற்குப் பரப்புரை செய்துவரும் ரணில் அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துவருகின்றது.
தம்மை ஜனநாயகவாதிகள் என்றும் நல்லாட்சியாளர்கள் என்றும் கூறித்திரிபவர்களின் ஆட்சியில் இவ்வாறான மோசமான வன்முறைகள் இடம்பெறுவதையொட்டி ஆட்சியாளர்களே வெட்கப்படவேண்டும்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளபோதும் குறித்த சம்பவத்தினை தற்செயலான விபத்து என பொலிசார் ஜோடிக்க முயன்று குற்றவாளியைத் தப்பிக்க முயல்வதாகவும் அறிகின்றோம்.
ஜனநாயகப் பணிபுகளில் முக்கிய ஒன்றான ஊடக சுதந்திரத்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்களின் மீது உரியவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாகீசம் இணைய குடும்பத்தினர்