ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டமைப்பில் ஈரோஸ் அமைப்பு இணைந்துகொண்டுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் இதனை அறிவித்தார்.
ஈரோஸ் அமைப்பின் சார்பில் அவ்வமைப்பின் செயலாளர் இராஜேந்திரா பத்திரிகையாளர் மாநாட்டினில் இணைந்து பங்கெடுத்திருந்தார். அதன்போது குறிப்பிட்ட அவர்,
விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த ஈரோஸ் அமைப்பு தேசியத்தின் குரலாக ஒலிக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்பட தவறியதன் அடிப்படையில் அதற்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்டு மாற்றுத் தலைமை தேவை என்ற அடிப்படையில், புதிய தலைமையின் கீழ், களமிறங்கும் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் கிழக்கிலும் வன்னியிலும் தமது அமைப்பு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் சின்னமான உதயசூரியனின் கீழ் போட்டியிடுமென அவர் மேலும் தெரிவித்தார்.