இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்கவேண்டும்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளுக்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்க வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சருக்கும் தெரிவித்து வந்துள்ளோம். தாங்க முடியாத அளவுக்கு மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
மருந்துகளை கொள்வனவு செய்வதில் பல முறைகேடுகள் ஊழல்கள் இடம்பெறுகின்றன. அதிகாரிகளிடம் இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. நோயாளிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது. இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.