வட மாகாணத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை ஆகிய இரண்டு இடங்களிலும் இரு பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வடமாகாணத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு தற்போது முடிவு எட்டப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் இம்முறை அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் இப் பிரச்சினையினை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் இப்பிரச்சினைக்கு வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனுடன் இணைந்து இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்குமாறு அமைச்சர் ஹரிசனுக்கு பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள பிரதமர் வடக்கிற்கான பொருளாதார நிலையமானது வவுனியா நகரப் பகுதியிலோ, ஓமந்தையிலோ அல்லது மாங்குளத்திலோ அமைய வேண்டியுள்ளது. எனினும் இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் வவுனியா மாவட்டத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் வெவ்வேறாக இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இறுதி முடிவை மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இணைந்தே எடுக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.