பாகிஸ்தானை சேர்ந்த இந்துப் பெண்ணொருவர் முதன்முறையாக பொலிஸ் துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த புஷ்பா கோலி என்ற பெண் சிந்து மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் சிந்து மாகாணத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த தகவலை மனித உரிமைகள் ஆர்வலரான கபில் தேவ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாகாண போட்டிப் பரீட்சையில் புஷ்பா கோலி தகுதி பெற்று சிந்து மாகாண பொலிஸ் தலைமையகத்தில் உதவி துணை ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சிந்து மாகாணத்தில் பொலிஸ் துறையில் இணையும் இந்து மதத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை புஷ்பா கோலி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்” என டுவீட் செய்திருந்தார்
கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த சுமன் பவன் போடானி என்பவர் சிவில் மற்றும் நீதித்துறை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் மொத்தமாக 90 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.