பொலிசாரால் கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார்.
குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர்பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த வைத்தியர்
சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனவும் தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை அவ் வைத்தியர் ஒப்புக்கொண்டதாகவும் ‘திவயின’ பத்திரிகை இன்று (25) செய்தி வெளியிட்டிருந்தது.
அவர் கருத்தடை சத்திர சிகிச்சையை சட்டவிரோதமாக மேற்கொண்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, குருணாகல் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நேற்று விசாரணை இடம்பெற்றது. இதன்போது அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.
சட்டவிரோதக் கருத்தடை சத்திர சிகிச்சை, வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களின் ஊடாக அவர் பெருமளவில் பணம் ஈட்டியுள்ளார் எனப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் ‘திவயின’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர், சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்து சேகரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகவே கைதானார் என்று பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் கருத்தடை சத்திர சிகிச்சையைப் புரிந்தாரா? என்பது தொடர்பில் பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.